ரென் சி மருத்துவமனையின்கீழ் இயங்கி வரும் இரண்டாவது தாதிமை இல்லமான 'ரென்ச்சி@புக்கிட் ஸ்திரீட் 52', நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் அமைந்துள்ள இந்தத் தாதிமை இல்லம் கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது. இதில் மூத்தோர் பராமரிப்பு நிலையமும் இயங்கி வருகிறது. ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்குப் பராமரிப்பு, மறுவாழ்வுச் சேவைகளையும் இந்நிலையம் வழங்குகிறது.
வெகுவேகமாக மூப்படைந்து வரும் மக்கட்தொகைக்கு சிங்கப்பூர் தயாராகி வரும் வேளையில், நாம் மூத்தோருக்கு நல்ல சமூகப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவது முக்கியமாகும் என்று ரென் சி மருத்துவமனையின் தலைவராகிய திரு சுவா தியான் போ கூறினார். மூத்தோர் மனநிறைவுடனும் அவர்களுக்குரிய அனைத்து வசதிகளுடன் வயதடையவும் தேவையான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அன்போடும் ஊக்கத்துடனும் வழங்குவது தாதிமை இல்லத்தின் முக்கிய நோக்கம் என்றும் திரு சுவா மேலும் கூறினார். ரென் சி மருத்துவமனையின் மூன்றாவது தாதிமை இல்லம், அடுத்த ஆண்டு அங் மோ கியோவில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்தோர் அனைத்து வசதிகளுடன் மூப்படைய (Age in Place ), தாதிமை இல்லங்களின் திறனை விரிவுபடுத்துவதற்கும் மூத்தோர் பராமரிப்புச் சேவைகளைச் சமூகத்திற்கு அருகே கொண்டு வருவதற்கும் சுகாதார அமைச்சு மூத்தோர் தொடர்பான திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும்.
தாதிமை இல்லத்தைத் திறந்து வைத்த சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (இடது). படம்: வான்பாவ்