செப்டம்பர் 16ஆம் தேதி முதல் ஏழு ஃபேர்பிரைஸ் கடைகளில் ஒரு மாதகால முன்னோட்டச் சோதனையாக பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படவிருக்கிறது.
வாடிக்கையாளர்கள் சொந்தமாகப் பைகளை எடுத்துவர இந்நடவடிக்கை ஊக்குவிக்கும் என ஃபேர்பிரைஸ் புதன்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. ஹவ்காங் ஒன் மாலில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, ஜொங்ஷான் பார்க் மாலில் உள்ள ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், மேப்பல் ட்ரீ 18 மாலில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடி, லோரோங் சுவானில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ், செங்காங் சமூக மருத்துவமனை, க்ரியேட் வே, அல்ஜூனிட் சாலை ஆகிய இடங்களிலுள்ள சியர்ஸ் கடைகள் ஆகியன முன்னோட்டச் சோதனையில் இடம்பெறுகின்றன.
இந்தக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு 10 காசும் 20 காசும் கட்டணம் விதிக்கப்படும். ஃபேர்பிரைஸ் பேரங்காடி, ஃபைனஸ்ட், எக்ஸ்ட்ரா ஆகியவற்றில் பிளாஸ்டிக் பைகளுக்கு 20 காசும், சியர்ஸ், எக்ஸ்பிரஸ் கடைகளில் 10 காசும் செலுத்தவேண்டும்.
கட்டணம் செலுத்துவோர், போதுமான பொருட்கள் வாங்கினால் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த முடியும். பிளாஸ்டிக் பைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை சிங்கப்பூர் சிறுவர் சங்கத்திற்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கும் ஃபேர்பிரைஸ் நன்கொடையாக வழங்கும்.
இந்த முன்னோட்டச் சோதனை தவிர, பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்த ஆய்வையும் ஃபேர்பிரைஸ் நடத்தவிருக்கிறது. அதோடு, சிங்கப்பூரில் பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழிவைக் குறைப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு ஃபேர்பிரைஸ் அழைப்பு விடுத்தது. ஏற்கப்படும் பரிந்துரைகளுக்கு நிதியளிக்க, ஒரு மில்லியன் வெள்ளி நிதியை ஃபேர்பிரைஸ் தொடங்குகிறது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள், ஒவ்வோர் ஆண்டும் 30 மில்லியன் பிளாஸ்டிக் பைகளைச் சேமிக்கும் இலக்கை அடைவதற்கு இந்த முனைப்புகள் துணை புரியும் என ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டது.