பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானிகளின் இரு நாள் வேலை நிறுத்தத்தால் தன்னுடைய பிரிட்டன் விமானச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
“விமானிகளின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல மாதங்கள் முயற்சிகள் இடம்பெற்றபோதிலும் கடைசியில் இத்தகைய ஒருநிலை ஏற்பட்டு இருக்கிறது. எனினும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்த தயாராக உள்ளோம்,” என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் நேற்று தங்களுடைய 48 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். அதனால் அந்த விமான நிறுவனத்தின் பல சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்களும் பாதிப்புக்கு உள்ளாயின.
சங்கம், செப்டம்பர் 27ஆம் தேதி மேலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.15க்குப் புறப்பட்டுச் செல்லவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவை ரத்தானது.