காபூல்: அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தை நின்றுபோன நிலையில், தலிபான்களுடனான அமைதிப் பேச்சுக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை மையமாகக் கொண்டு ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா தலைமையில் 9 சுற்றுகள் நடந்தன.
இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புக்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் 17 பேர் பாகிஸ்தான் வந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
பேச்சுவார்த்தையை அமெரிக்கா நிறுத்தியதை தலிபான்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், தலிபான்களை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து அஷ்ரஃப் கனி கூறும்போது, “தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம்.
“ஆனால், தலிபான்கள் எங்களை அச்சுறுத்த விரும்பினால் எங்களிடம் உள்ள படைகளைப் பாருங்கள்,” என்றார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் தலிபான்கள் தரப்பு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அஷ்ரஃப் கனி வைத்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுப்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
“ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் அனைத்துலகப் படைகளின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர் நடவடிக்கையைத் தாண்டியும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் எழுந்து வருகின்றனர்,” என்றார் அண்டோனியோ கட்டர்ஸ்.