ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் தமது 83வது வயதில் காலமான இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் பச்சாருதின் ஜுசுஃப் ஹபிபீயின் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் உட்பட பல தலைவர்கள் தங்கள் இரங்கலை திரு ஹபிபீயின் மகன் திரு இல்ஹம் அக்பர் ஹபிபீ மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி உள்ளனர்.
தமது இரங்கல் கடிதத்தில் அதிபர் ஹலிமா, ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு நாட்டைத் துடிப்புடனும் உத்வேகத்துடனும் ஜனநாயகத்தை சரியான பாதையில் இட்டுச் சென்ற மாபெரும் தலைவரை இந்தோனீசியா இழந்து விட்டது என்று எழுதியிருந்தார்.
“அனைத்து இந்தோனீசியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சியில் அயராது உழைத்து நாட்டுக்குச் சேவையாற்றியவர் அதிபர் ஹபிபீ,” என்று திருவாட்டி ஹலிமா புகழாரம் சூட்டினார்.
திரு இல்ஹம் ஹபிபீக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் லீ, இந் தோனீசியாவின் சிரமமான காலகட்டமாக இருந்த ‘ரிஃபோமாசி’ யின்போது திரு ஹபிபீ அதிபராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.
“1997ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடியின்போது நாட்டை நிலைநிறுத்த திரு ஹபிபீ அயராது உழைத்தார். இந்தோனீசியாவில் வட்டார அளவில் தன்னாட்சியையும் பரவலாக்கத்தையும் ஏற்படுத்
துவதன் மூலம் அனைத்து இந்தோனீசியர்களை ஒன்றுப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்தார்.
இந்தோனீசியாவின் முன்னாள் அதிபரை தாம் பலமுறை சந்தித்திருப்பதாகவும் அப்போது சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து, ஒத்துழைத்து, தங்கள் நாட்டு மக்களுக்குப் பலன்களை அளிக்கலாம் என்று விவாதித்திருப்பதாகவும் கூறினார்.
“நாங்கள் நிரந்தரமான அண்டை நாடுகள், நிரந்தரமான நண்பர்கள், எங்கள் இரு நாடுகளின் எதிர்காலம் பின்னிப் பிணைந்திருக்கிறது,” என்றும் திரு லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆசிய நிதி நெருக்கடியின்போது திரு ஹபிபீயைச் சந்தித்த நினை வுகளைப் பகிர்ந்துகொண்ட மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், “தமது நாட்டின் மீது அவர் வைத்திருத்த பேரன்பு, விமானப் பொறியியல் துறையில் அவர் கொண்டிருந்த பேரார்வம், பொதுச் சேவை மீது அவர் வைத்திருந்த திடமான நம்பிக்கை ஆகியவற்றுக்காக அவர் என்றென்றும் நம் நினைவில் இருப்பார்,” என்று கூறி னார்.
அரசியல், பொருளியல் சவால்கள் நிறைந்த காலத்தில் திரு ஹபிபீ, இந்தோனீசியாவை சிறந்த முறையில் வழிநடத்தினார் என்றார் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்.
“இந்தோனீசியா மீது அவர் வைத்திருந்த அளவுகடந்த அன்பும் கடப்பாடும், அவர் மீது எனக்கிருந்த மதிப்பைப் பன்மடங்காக்
கியது,” என்றும் திரு கோ கூறினார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடிக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில், இந்தோனீசியாவின் தற்போதைய ஜனநாயகத்துக்கும் துடிப்பான பொருளியலுக்கும் திரு ஹபிபீ வித்திட்டார் என்று குறிப்பிட்டார்.
“இந்தோனீசியாவில் வட்டார அளவில் தன்னாட்சியையும் பரவலாக்கத்தையும் அனைத்து இந்தோனீசியர்களின் நலனுக்காக ஏற்படுத்தியவர் அதிபர் ஹபிபீ. இந்தோனீசியாவுக்கு அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது,” என்றும் டாக்டர் விவியன் தமது கடிதத்தில் எழுதியிருந்
தார்.