சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையொட்டி, கவிமாலையின் தலைவி கவிஞர் இன்பாவின் தொகுப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த 50 பெண்களின் 200 கவிதைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. கவிமாலை அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, ‘யாதுமாகி’ என்ற கவிதைத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழாவை தேசிய நூலக வாரியத்தின் POD அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியில் ‘இன்று இவர்கள் இங்கே’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில், காவியப் பெண்களான கண்ணகி, வாசுகி, மாதவி, மணிமேகலை, ஔவையார், திரௌபதி ஆகியோர் நவீன சிங்கப்பூருக்கு வந்தால் என்னவாகுமென்ற கற்பனையில் உருவான கவிதைகளைத் தங்கள் ‘கவியாடல்’ நிகழ்வில் படைத்தனர். நடுவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கவியாடல் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் சித்ரா சங்கரன், சிங்கப்பூரில் ஆண் ஆதிக்கம் அந்த அளவு இல்லை எனக் குறிப்பிட்டதுடன் நாட்டில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் சுட்டினார்.
வளர்ந்துவிட்டோம் என்று எண்ணிப் பெண்கள் ஒரு தேக்க நிலையை அடைந்திடாமல் வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். மேலும் சிங்கையில் அன்று முதல் இன்று வரை பெண் கவிஞர்கள் அடைந்துள்ள வளர்ச்சியையும் சுட்டிக் காட்டினார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட முனைவர் சித்ரா வரப்பிரசாத், 50 பெண்களை ஒருங்கிணைத்த இப்பெரும் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்.
கவிதைகளைப் படிக்க வேண்டும், அவற்றைப் பற்றி பேச வேண்டும், கவிதை எழுத ஆர்வம் வேண்டும், அதில் ஈடுபாடு காட்ட வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் பின்னர் கவிதை தானாக வருமெனச் சுட்டினார். கவிதைகள் எழுதிய பெண்களுக்கு மேடையில் நூல்கள் வழங்கப்பட்டன.