ஹாங்காங்: ஹாங்காங்கின் கௌலூன் பே வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதியில் சீனாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டோருக்கும் ஜனநாயக உரிமை கோரி போராட்டத்தில் இறங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று கைகலப்பு மூண்டது.
மூர்க்கத்தனமாக மோதிக்கொண்ட இருதரப்பினரையும் கலைக்க போலிசார் கடைத்தொகுதிக்குள் நுழைந்து பலரைக் கைது செய்தனர்.
‘போலிசாருக்கு ஆதரவு கொடு’, ‘சீனா! தொடர்ந்து வலிமையைக் காட்டு’, போன்ற முழக்கங்களை சீனாவுக்கு ஆதரவாக பலர் அந்நாட்டின் கொடியை ஏந்தியவாறு எழுப்பினர்.
‘ஹாங்காங் சீனாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு பெண் கத்தியதும் அவரை நோக்கி வசைமொழி பாய்ந்தது.
அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
கடைத்தொகுதிக்குள் தொடங்கிய மோதல் தெருக்களுக்கு வந்தது. இதற்கிடையே, ஹாங்காங்கில் மனித உரிமையைக் கட்டிக்காக்க உதவும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஹாங்காங்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜோஷ்வா வோங்.
சீனாவுடன் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தங்களில் மனித உரிமை நிபந்தனையையும் சேர்த்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். நியூயார்க் சென்றுள்ள வோங் ஹாங்காக்கில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி அமெரிக்க அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டார்.