தெங்கா, பிடாடரி வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளின் கட்டுமானத்தில் முதல்முறையாக முப்பரிமாண அச்செடுத்தல் தொழில்நுட்பம் (3டி பிரிண்டிங்) பயன்படுத்தப்படவுள்ளது. நிலவனப்பு, வீட்டு வடிவமைப்பு அம்சங்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் செலவும் நேரமும் மிச்சமாவதுடன் ஊழியர்களும் அதிகம் தேவைப்படமாட்டார்கள். அத்துடன் வழக்கமான முன்வடிவமைப்பு கட்டுமான முறையிலிருந்து மாறுபட்ட புதுமையான வடிவமைப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
கட்டுமானத்துறையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வீவக முன்னெடுக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வீவக தெரிவித்தது.
உட்லண்ட்சில் உள்ள வீவக கட்டுமான ஆய்வு மையத்தில் முப்பரிமாண கான்கிரீட் அச்செடுத்தல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஒன்பது மீட்டர் நீரமும் 3.5 மீட்டல் அகலமும் 3.8 மீட்டர் உயரமும் கொண்ட கட்டட பகுதிகளை அச்செடுக்கக்கூடிய இயந்திரம் உள்ளது. இதை நிர்மாணிக்க கிட்டத்தட்ட $900,000 செலவானது.
எனினும், எதிர்காலத்தில் முப்பரிமாண அச்சில் உயர்மாடி கட்டடங்கள் சாத்தியமாகுமா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சோதனைகளும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் தேவைப்படும். உதாரணமாக, முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட கட்டப்பகுதிகள் சிங்கப்பூர் தட்பவெட்ப நிலைக்கு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்குமா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
முப்பரிமாண அச்சு முறைப் பயன்பாடு, எதிர்கால கட்டுமானத் துறையில் புதிய, ஆர்வம் மிகுந்த வாய்ப்புகளுக்கு வழிவிட்டுள்ளது என்றார் வீவகவின் கட்டட வடிவமைப்பு மற்றும் முன்வடிவமைப்புக்கான துணை இயக்குநர் திரு ஹெரு சொடார்சொனோ கூறினார்.
இந்த அச்செடுக்கும் முறை அதிகளவு தானியக்கமாக்கப்பட்டுள்ளதால் கட்டட வடிவமைப்பாளர்களும் வடிவமைப்பாளர்களும் தங்களது வடிவமைப்பில் அதிக சுதந்திரத்துடன் நீக்குப் போக்குடனும் செயல்படமுடியும். இந்த முறையில் மனிதவளத்தைச் சார்ந்திருக்கும் தேவை மிகவும் குறைக்கிறது என்றார் அவர்.