கனமழை காரணமாக வடஇந்தியாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல வடஇந்திய மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் மழை பெய்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக இதுவரை குறைந்தது 113 பேர் மாண்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கும் மழைக்காலம் பொதுவாக செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் தணிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் குறைந்தது 93 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதால் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்லியா மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையிலிருந்து கிட்டத்தட்ட 900 கைதிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுஉள்ளது.
இடுப்பு அளவு வெள்ளத்தில் சிக்கி பலர் அவதியுறுவதாக இந்திய ஊடகம் தெரிவித்தது.
பாட்னாவில் உள்ள வீடுகள், கடைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளம் காரணமாக வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவித்த பீகார் மாநிலத் துணை முதல்வர் சுஷில் மோடியையும் அவரது குடும்பத்தினரையும் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.