சிங்கப்பூர் பெண்களை ஆபாசமாகக் காட்டும் படங்களையும் காணொளிகளையும் பகிர்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ‘டெலிகிராம்’ குழு ஒன்றை விசாரித்து வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் புகார் கொடுத்ததை அடுத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பாவாடைக்குள் எடுக்கப்பட்ட சில படங்களும் “எஸ்ஜி நாசி லெமாக்” என்ற அந்தக் குழுவின் வழியாகப் பரவிய
தாகக் கூறப்படுகிறது.
தற்போது செயலிழக்கப்பட்டு உள்ள அந்தக் குழுவில் 44,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருந்ததாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னதாக அந்தக் குழு அமைக்கப்பட்டபோது அதில் சேர்ந்தோரின் எண்ணிக்கை அண்மைய சில மாதங்களாக வெகுவாகக் கூடியதை வாசகர் ஒருவர் சுட்டியதாக வான்பாவ் தெரிவித்தது.
இந்தக் குழுவில் சேர விரும்புவோர் 30 வெள்ளிக் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்படுகிறது.
‘சிங்கப்பூர் நாஸி லெமாக்’கில் தன்னைப் பற்றிய பேச்சு எழுந்தது குறித்து டார்செல் எனஸ்டேஷியா என்ற பெண் டுவிட்டரில் செப்டம்பர் 30ஆம் தேதி குறைகூற ஆரம் பித்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் அந்தக் குழு குறித்த கண்டனங்களை வெளியிடத் தொடங்கினர்.
ஆபாசப் படைப்புகளைப் பரப்புவது குற்றம் என தெரிவித்த போலிசார், இத்தகைய குற்றச்செயலைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு ஊக்குவித்துள்ளனர்.
தகவல் தெரிவிக்க பொது மக்கள் 1800-2550000 எனும் எண்ணில் போலிசுடன் தொடர்பு கொள்ளலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் போலிசார் உறுதியளித்துள்ளனர்.
மின்னணுவியல் தொழில்நுட்பம் வழி ஆபாசப் படைப்புகளை அனுப்புவோருக்கு மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.