ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் பயிலும் ஜீவன் சந்தானத்திற்கு வயது 14 மட்டும்தான். ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் இவர் பெரிய லட்சியம் கொண்டவராக உள்ளார்.
தமது கனவை நனவாக்கும் விதமாக, பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தில் ஒரு மாதகாலப் பயிற்சிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருடன் மற்றொரு பிரதிநிதியாக, பெண்கள் தேசிய அணித் தலைவரான ஷஃபினா மகேஷும் அங்கு செல்வதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெவ்வேறு காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 58 இளம் வீரர்கள் இந்தப் பயிற்சி முகாமில் இடம்பெறுவர். உள்ளூர் கிரிக்கெட் லீக்கில் விளையாடிவரும் ஜீவன், நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டார். “பன்னாட்டு விளையாட்டு வீரர்களுடன் பயிற்சி செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.
“இந்த அனுபவத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புதிய திறன்களைக் கற்று நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தர ஆர்வத்துடன் உள்ளேன்,” என்றார் ஜீவன். ஜீவனின் தந்தையான எஸ். சந்தானம், 44, “இளம் வயதிலிருந்தே ஜீவனுக்கு கிரிக்கெட் மீது அலாதி பிரியம். அந்த வகையில் இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவத்தைத் தரும் என நினைக்கிறேன்.
ஜீவனுக்கும் ஷஃபினாவுக்கும் கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து கருத்துரைத்த சாட் கான் ஜாஞ்சுவா, “பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் விளையாடுவதாலும் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதாலும் இருவரும் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்,” என்றார்.