வருங்காலத்தில் தனது காதலராக வருபவர் நல்ல நகைச்சுவைத் திறன் கொண்டவராக இருக்க வேண்டும் என்கிறார் நடிகை ஷ்ருதி ஹாசன். அது மட்டுமல்ல, நல்ல மனம் படைத்தவராகவும் இருக்க வேண்டியது அவசியமாம்.
நீண்ட நாட்களாகவே காதல் வயப்பட்டிருந்தார் ஷ்ருதி. இது குறித்து ஊடகங்களில் பலவிதமான கிசுகிசுக்கள் வெளிவந்த போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் அந்தக் காதல் முறிந்து போனதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை மஞ்சு லட்சுமி சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து பேட்டி கண்டு வருகிறார். அந்த வகையில் ஷ்ருதியும் அவருக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தனது திருமணம், எதிர்கால வாழ்க்கை குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ஷ்ருதி.
“நான் இதுவரை ஒருவரை மட்டுமே காதலித்துள்ளேன். வேறு எந்தத் தருணத்திலும் யார் மீதும் எனக்குக் காதல் உணர்வு ஏற்பட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை எதையும் எளிதாக எடுத்துக்கொள்வேன்.
“ஒருவகையில் என்னை அப்பாவி என்றும் குறிப்பிடலாம். அதே வேளையில் நான் மிகவும் உணர்வுபூர்வமானவள். ஒருவேளை என்னை யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,” என்கிறார் ஷ்ருதி ஹாசன்.
முதல் காதல் தோல்வி அடைந்தது குறித்து இவர் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அந்தக் காதல் நல்லதொரு அனுபவமாக இருந்தது என்கிறார். அதுமட்டுமல்ல, மீண்டும் காதல் வயப்பட வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
“சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன். எனக்குக் காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். சுற்றியுள்ள நான்கு பேரைச் சிரிக்க வைக்கக் கூடிய நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும் எனவும் விரும்புகிறேன்.
“மேலும் சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். இதைத் தவிர எனது வருங்காலக் காதலர் குறித்து வேறு பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை,” என்று ஷ்ருதி ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே இடைவெளி விடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறார் ஷ்ருதி.
மழை பெய்தால், வெயில் சுட்டால், முக்கிய தினங்கள் என்று ஏதேனும் ஒரு காரணத்துக்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இவற்றைப் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கிடக்கிறது.
இந்நிலையில் தனியார் ஊடகம் இசைத் துறையில் சாதித்ததற்காக ஷ்ருதிக்கு அவரது தந்தை கமல்ஹாசன் கையால் விருது கொடுத்து கௌரவித்ததில் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஷ்ருதியின் திருமணம் மிக விரைவில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒரு நடிகை தனது திருமணத்துக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அவர் லட்சுமி மேனன்.
கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த இவருக்கு, அதன் பிறகு தமிழில் எந்தப் படமும் அமையவில்லை. இதனால் நடிப்பிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் லட்சுமி.
தற்போது அவருக்கு 22 வயதாகிறது என்றும், அவருக்குத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து லட்சுமிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்து வருகிறதாம்.