பிராக்: யூரோ 2020 கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் 2-1 எனும் கோல் கணக்கில் செக் குடியரசுவிடம் இங்கிலாந்து வீழ்ந்தது. யூரோ தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து தோல்வியுற்று இருப்பது 10 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.
செக் குடியரசின் சொந்த மண்ணில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த தகுதிச் சுற்று ஆட்டத்தின் 85வது நிமிடத்தில், மாற்று ஆட்டக்காரரான ஸ்டெனெக் ஒன்ட்ராசெக் கோல் போட்டு செக் குடியரசின் வெற்றியை உறுதி செய்தார்.
ரஹீம் ஸ்டெர்லிங் மீது இழைக்கப்பட்ட தப்பாட்டம் காரணமாக ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஹேரி கேன் இங்கிலாந்துக்காக முதல் கோலை வலைக்குள் புகுத்தினார்.
ஆனால், ‘கார்னர் கிக்’ வாய்ப்பைப் பயன்படுத்தி நான்கே நிமிடங்களில் செக் குடியரசு ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கி கால் மணிநேரம் கழித்து செக் குடியரசின் மசுபுஸ்ட் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்ஃபர்ட் திறம்பட தடுத்தார். அந்த தருணத்தைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் கோல் போடும் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், செக் குடியரசுக்காக ஒன்ட்ராசெக் தலையால் முட்டி கோலைப் போட்டு இங்கிலாந்து தரப்பை அதிர வைத்தார்.
இந்த முடிவின் மூலம், ‘ஏ’ பிரிவில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்துக்கு சமமாக செக் குடியரசு நான்கு ஆட்டங்களில் வென்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், இங்கிலாந்தைவிட அக்குழு கூடுதலாக ஓர் ஆட்டம் விளையாடி இருக்கிறது.