வி.இசட். துரை இயக்கத்தில் உருவாகிறது ‘இருட்டு’. சுந்தர் சி. நாயகனாக நடித்துள்ளார்.
திகிலும் நகைச்சுவையும் கலந்த படமாக இது உருவாகி இருக்கிறதாம். தனக்குப் பேய்கள் மீது நம்பிக்கை இல்லை என்கிறார் துரை. தவிர சிறு வயது முதல் திகில் படங்கள் பார்ப்பதிலும் ஆர்வமில்லையாம்.
“அப்படிப்பட்ட என்னையே திகில் படத்தை இயக்க வைத்துள்ளார் சுந்தர் சி. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்,” என்கிறார் துரை.
இவரைப் பற்றி அஜித் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவரை வைத்து ‘முகவரி’ படத்தை இயக்கியவர்.
“அதேபோல் விக்ரமுக்கு ‘காதல் சடுகுடு’, சிம்புவுக்கு ‘தொட்டி ஜெயா’ என்று வெற்றிப் படங்களைத் தந்தவர்.
“இப்போதெல்லாம் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் நாயகர்களுக்கு அப்படத்தின் இயக்குநர் கார் வாங்கிப் பரிசளிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், ‘முகவரி’ வெளியீடு காணும் முன்பே எனக்கு கார் ஒன்றைப் பரிசளித்தார் அஜித். அந்தளவிற்கு அந்தப் படம் அவரை ஈர்த்திருந்தது.
“இப்போது சுந்தர் சி. சாருடன் பணியாற்றுவதும் அதேபோன்ற சிலிர்ப்பைத் தருவதாக உணர்கிறேன். குருவே இல்லாமல் சினிமா துறைக்கு வந்துவிட்டோமே எனும் ஏக்கம் எனக்குள் எப்போதும் இருந்து வந்தது. ஆனால் சுந்தர் சி. சாருடன் பணியாற்றிய பிறகு அந்த ஏக்கம் போய்விட்டது. அவரையே எனது குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
“38 படங்களை இயக்கியவர் அவர். ஆனால், படப்பிடிப்பு அரங்கிற்குள் வந்துவிட்டால் நடிகராக மட்டுமே செயல்படுவார். அந்தளவுக்குப் பண்பானவர். அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்,” என்கிறார் இயக்குநர் துரை.
‘இருட்டு’ படத்தில் தன்ஷிகா, விமலா ராமன், சாக்ஷி, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.