‘மைக்கேல் ஆகிய நான்’ என்ற பேய்ப்படத்தில் குடும்பத் தலைவியாக நடிக்கிறாராம் வசுந்தரா. இது தவிர ‘புத்தன் ஏசு காந்தி’ படத்தில் செய்தியாளராகவும், உதயநிதி ஸ்டாலின் படத்தில் நவநாகரிக பெண்ணாகவும் படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைவதால் உற்சாகமாக உணர்கிறாராம்.
மேலும், நாயகியை முன்னிலைப்படுத்தும் தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்கிறார்.
தமிழ் சினிமாவில் இருந்து அவ்வப்போது காணாமல் போய் திரும்பி வரும் நடிகைகளில் வசுந்தராவும் ஒருவர். ஆனால் மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போகிறார்கள் என்றால் இவர் வேண்டுமென்றே தனக்குக் கட்டாய விடுமுறை எடுத்துக் கொள்கிறார்.
“சீனு ராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் என் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்கள் மட்டுமே தேடி வந்தன.
“கிராமத்துப் பெண்ணாக நடிப்பது, கிராமப்புறப் படப்பிடிப்புகளில் பங்கேற்பது, திண்ணையில் படுத்து உறங்கி காலையில் வாய்க்காலில் குளித்துவிட்டு நடிப்பது எல்லாம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அதேசமயம் ஒரே மாதிரியான சீருடையை அணியும் உணர்வும் ஏற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
“அதனால்தான் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமையட்டும் என முடிவெடுத்து தமிழில் நடிப்பதில் சற்று இடைவெளி விட்டேன். அதற்கு ஓரளவு பலன் கிடைத்திருப்பதாகவும் நம்புகிறேன்,” என்கிறார் வசுந்தரா.
இவர் அச்சு அசலான தமிழ்ப் பெண். தாய்மொழியில் சாதித்துக் காட்டிய பிறகே பிறமொழிப் படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தாராம். ஆனால் திடீரென அந்த உறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனது என்கிறார்.
“எனக்கென்ன குறை இருக்கிறது. ஏன் தமிழ் சினிமா எனக்குரிய இடத்தைக் கொடுக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கான விடையைத் தெரிந்துகொள்ளவும், ஒரே மாதிரி நடிப்பதில் இருந்து என்னை மாற்றிக் கொள்ளவும் சிறு ஓய்வு காலம் தேவைப்பட்டது,” என்கிறார் வசுந்தரா.
தொடக்கத்தில் அதிசயா என்ற பெயரிலும் நடித்தவர், பிறகு தன் பெயரை மாற்றிக்கொண்டார். வசுந்தரா காஷ்யப் என்ற தனது சொந்த பெயருக்குத் திரும்பிய பிறகு வாய்ப்புகளும் தேடி வரவே திருப்தியாக உணர்கிறார்.
தொடர்ந்து கிராமத்துக் கதாபாத்திரங்களில் நடிப்பது அலுப்பைத் தரவில்லையா? என்று பலரும் கேட்கிறார்களாம். இதே கேள்வியை தமக்குத் தாமே கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார் வசுந்தரா.
“எனக்கு முன்னால் பல கதாநாயகிகள் கிராமத்துக் கதாபாத்திரங்களில் நடித்துச் சாதனை படைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது அந்தக் கதாபாத்திரங்களை எதிர்மறையானவை என்று நான் ஏன் நினைக்க வேண்டும்?
“தீவிரமாக யோசித்தபோது கன்னியாகுமரி கிராமத்துப் பெண்ணும், வேலூர் பெண்ணும் வேறு வேறு நபர்கள் என்பது புரிபட்டது. இதை உணர்ந்து நடிப்பில் வித்தியாசத்தைக் காட்டலாம் என்று முடிவு செய்துதான் பல படங்களில் நடித்தேன்,” என்று சொல்லும் வசுந்தரா, அண்மைக் காலமாக தனது நடிப்புப் பசிக்குத் தீனிபோடும் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து வருகிறார்.
நாயகியாகத்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இவர் பிடிவாதம் பிடிப்பதில்லை. ‘கண்ணே கலைமானே’ படத்தில் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும், கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளிஇருக்கிறார். இயக்குநர் சீனு ராமசாமி இவரது குடும்ப நண்பராம். அதனால்தான் சிறிய வேடம் என்றாலும் நடிக்க சம்மதித்தாராம்.
“எனது முயற்சிக்குக் கிடைத்த பாராட்டு காரணமாக தொடர்ந்து ‘பக்ரித்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடம் என்றாலும், அதில் நடித்து முத்திரை பதிக்க முடியும் என்பதை உணர்ந்து நடித்துள்ளேன். அப்புக்குட்டியுடன் ‘வாழ்க விவசாயி’ படத்தில் நடித்தது குறித்து பலர் கேள்வி கேட்கிறார்கள்.
“நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேரலாமா? என்று கேட்பது அபத்தமாகப்படுகிறது. அவரும் ஒரு திறமை வாய்ந்த நடிகர். தேசிய விருது பெற்றவர்.
“விவசாயிகளின் மோசமான நிலைமை குறித்துப் பேசும் படத்தில் யாருடன் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது குறித்து நாம் நிபந்தனை விதிக்க முடியாது. தேசிய விருது பெற்ற நடிகருடன் நடித்துள்ளேன். அதே போல் தேசிய விருது பெற்ற படத்திலும் பங்கேற்றுள்ளேன். நிச்சயமாக நானும் தேசிய விருது வாங்குவேன்,” என்கிறார் வசுந்தரா.