லண்டன்: பிரிட்டனில் ஒரு லாரி கொள்கலனுக்குள் இறந்துகிடந்த 39 பேர் சீன நாட்டவர் என்று தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் லாரியை ஓட்டிச் சென்ற 25 வயதான மோ ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் தொடர்பிலான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. திட்டமிட்டு குற்றங்கள் புரியும் கும்பல்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அத்தகைய கும்பல்களைக் குறிவைத்து விசாரணை நடத்தப்படுவதாக அந்நாட்டு தேசிய குற்றத்தடுப்பு முகவை தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்தின் ஜைபுரூகாவிலிருந்து தேம்ஸ் நதி வழியாக பர்ஃபிளீட்டுக்கு அந்த டிராக்டர் வந்து சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. மத்திய லண்டனிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் குளிர்பதன லாரியில் 38 பெரியவர்கள், பதின்ம வயதினர் ஒருவர் ஆகியோரது சடலங்களை அவசர மருத்துவ வாகன ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கண்டுபிடித்தார்.
வடக்கு அயர்லாந்தில் இருந்து வந்த லாரி பர்ஃபிளீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலனை இழுத்துச் சென்றதாக போலிசார் குறிப்பிட்டுள்ளனர். அந்த லாரியை ஓட்டிச்சென்ற மோ ராபின்சன் அப்பாவியாக இருக்கலாம் என்றும் அந்த கொள்கலனை துறைமுகத்திலிருந்து இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலிசார் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஜைபுரூகா துறைமுகத்தை அடைந்த அந்த கொள்கலன் அதே நாளின் பின்னேரத்தில் அங்கிருந்து பர்ஃபிளீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. 39 பேரும் அந்தக் கொள்கலனுக்குள் மாண்டுபோயினரா அல்லது அவர்களது மரணம் பெல்ஜியத்திலேயே நிகழ்ந்ததா என்பது பற்றிய தெளிவான தகவல் ஏதும் இல்லை. ஆள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக இது இருக்கலாம் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.