சிங்கப்பூரில் உள்ள ரயில் ஊழியர்களின் பயிற்சிக்கு உதவும்பொருட்டு அரசாங்கம் $100 மில்லியனை ஒதுக்குகிறது.
சிங்கப்பூரின் 21வது நூற்றாண்டுக்கான போக்குவரத்துத் தேவை களைப் பூர்த்தி செய்ய போக்குவரத்துத் துறை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த நிதித் திட்டம், ரயில் போக்கு
வரத்து நிறுவனங்களின் செலவுச் சுமையை எளிதாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மனிதவள மேம்பாட்டு உதவித் தொகுப்புத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று அறிவித்தார்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எம்ஆர்டி, எல்ஆர்டி ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் இந்த உதவித் தொகுப்பை ரயில் நிறுவனங்கள், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆகியனவும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
‘பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான நற்சான்று தினம் 2019’ நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கோ திட்டம் குறித்து விவரித்தார்.
“இப்போதுள்ள சூழ்நிலையில் ரயில் நிறுவனங்களின் நிதி நிலைமை ஆரோக்கியமற்றதாக உள்ளது. அவற்றின் முதலீடுகள் தடைபட்டுவிடாமல் தொடரும் வகையில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வழியாக அரசாங்கம் இணை முதலீட்டை வழங்கும்.
“இவ்வாறு செய்வதன் மூலம் ரயில் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வேலையில் சிறப்பாகச் செயல்படவும் தேவைப்படும் திறன்களைப் பெறுவர். பயணி
களுக்கான சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களது அடிப்படை நோக்கம்,” என்றார் அவர்.
இவ்வாண்டு மார்ச்சுடன் முடிவடைந்த 12 மாதக் கணக்கெடுப்பில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் $155 மில்லியன் இழப்பைச் சந்தித்தது. இந்த இழப்பு இதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு. ரயில் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் சுமார் 71% பழுதுநீக்கு
வதற்கும் பராமரிப்புக்கும் செலவானதாகக் குறிப்பிடப்பட்டது. அதேபோல எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் டௌன்டவுன் ரயில் சேவை மூன்றாண்டுகளுக்கு மேல் $125 மில்லியன் இழப்பைப் பதிவு செய்துள்ளது.