மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 7 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமது தற்காப்பு வாதத்தை முன்வைக்குமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
தமக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பின் மூலம் தமது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க முடியும் என்று கருதுவதாக திரு நஜிப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தற்காப்பு வாதத்தை முன்வைத்து சாட்சியம் அளிப்பதன் மூலம் என்னை தற்காத்துக்கொள்ள நான் விரும்பினேன், நீதிமன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்ய முடியும்,” என்றார் அவர்.
“இந்த வழக்கில் முதல்முறையாக தற்காப்புத் தரப்பு சாட்சிகளை அழைக்க எனது வழக்கறிஞர்களுக்கும் எனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றுவரை, அரசு தரப்பு சாட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
“இந்த நேரத்தில், அரசு தரப்பு சாட்சிகளுக்கு உண்மையான நிலைமையை எடுத்துக்கூறவும் நான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். விரைவில் நீதிமன்றத்தில் எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
நம்பிக்கை மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய மூன்று குற்றச்சாட்டுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை திரு நஜிப் எதிர்நோக்குகிறார்.
இதன் தொடர்பில் திரு நஜிப் தமது தற்காப்பு வாதத்தை முன்வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கஸாலி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் பிரதமர் மகாதீர் முகம்மது தலையிட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்ட செயல்முறை வெளிப்படையாக செயல்படுகிறது என்றும் அது மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் டாக்டர் மகாதீர் தலையிட்டதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லோக்மான் நூர் ஆதம் குற்றம் சாட்டியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன. அதற்குப் பதிலளிக்கும் விதமாக திரு அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.