பொலிவியாவின் எதிர்க்கட்சி செனட்டர் ஜெனின் ஆஞ்யெஸ், தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனப்படுத்திக்கொண்டார். முன்னாள் அதிபர் இவோ மொராலெஸ் பதவியிலிருந்து விலகியதை அடுத்து திருவாட்டி ஆஞ்யெஸின் இந்த அறிவிப்பு இன்று வெளிவந்தது.
இதன் தொடர்பிலான நாடாளுமன்றக் கூட்டத்தை திரு மொராலெஸின் கட்சியினர் புறக்கணித்ததால் இந்தப் புதிய நியமனத்திற்குத் தேவையான குறைந்தபட்ச வாக்குகள் சேரவில்லை.
இருந்தபோதும், பொலிவியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி அதிபருக்கு அடுத்த நிலையில் தாம் இருப்பதாகத் தெரிவித்த திருவாட்டி ஆஞ்யெஸின், விரைவில் பொதுத்தேர்தலை நடத்த உறுதி கூறியுள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிய முன்னால் அதிபர் மெக்சிகோவில் அடைக்கலம் புகுந்துள்ளார். சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் முடிவு குறித்து பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற பிறகு அவர் பதவியிலிருந்து விலகினார். “மக்கள் மேலும் ரத்தம் சிந்தக்கூடாது,” என்பதற்காகத் தாம் பதவியிலிருந்து விலகியதாக திரு மொராலெஸ் கூறினார்.