மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வென்றால், ஜோகூரின் தென்மேற்கே உள்ள குக்குப் பகுதிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே படகுச் சேவைகளைத் தொடங்க திட்டங்கள் இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்காக பக்கத்தான் ஹரப்பான் பேரணியில் நேற்று முன்தினம் பேசிய அவர், மீன்பிடி கிராமமான குக்குப்புக்கு சிங்கப்பூரிலிருந்து கூடுதலான சுற்றுப்பயணிகள் செல்ல இப்படகுச் சேவைகள் வகை செய்யும் என்று கூறினார். இதன் மூலம், குக்குப்பின் சுற்றுப் பயணத்துறை வளர்ச்சி அடைய முடியும் என்றார் அவர்.
சிங்கப்பூரின் துவாஸ் பகுதிக்கு அருகே தஞ்சோங் பியாய் பகுதியில் குக்குப் அமைந்துள்ளது. அண்டை நாடுகளில் சிங்கப்பூரர்கள் விரும்பிச் செல்லும் இடங்களில் குக்குப்பும் ஒன்று. குக்குப்பின் மீன்பிடி கிராமத்திற்குச் செல்லும் அவர்கள், குக்குப் தீவு-ஜோகூர் தேசிய பூங்காவில் உள்ள சதுப்புநிலப் பகுதிக்குச் சென்று சுற்றிப் பார்ப்பதும் உண்டு. அதோடு, உப்புக் கருவாடு, ‘பிளாச்சான்’ உள்ளிட்ட உணவு வகைகளை அவர்கள் வாங்குவர்.
தற்போது, சிங்கப்பூரிலிருந்து குக்குப் பகுதிக்குச் செல்ல துவாஸ் சோதனைச் சாவடி வழியாக இரண்டாம் இணைப்புப் பாலத்தைப் பயன்படுத்த வேண்டும். துவாஸ் சோதனைச் சாவடியிலிருந்து குக்குப்பிற்குச் செல்வதற்கான கார் வழி பயண தூரத்தைக் கணக்கெடுத்தால் அது ஏறத்தாழ 60 கிலோ மீட்டரை எட்டும். ஆனால், படகுச் சேவை தொடங்கப்பட்டால் தூரமும் பயண நேரமும் கணிசமாக குறையும்.
“சிங்கப்பூரின் துவாஸுக்கு குக்குப்புக்கும் இடையே படகுச் சேவை எதுவும் ஏன் இல்லை எனக் குடியிருப்பாளர்கள் பலர் என்னிடம் கேட்டிருந்தனர். ஏனெனில், குக்குப்புக்கு வருகை புரிந்து இங்குள்ள கடல் உணவைச் சாப்பிடுவதன் பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிங்கப்பூரர்களுக்கு பிடித்தமான ஒன்று,” என்று திரு முஹைதீன் விவரித்தார்.
மேற்கண்ட இந்தக் கருத்தை அவர் கூறியதும், பேரணியில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
குக்குப்பில் சுற்றுப்பயணத்
துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் போட்டியிடும் கட்சிகளின் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த இடைத்தேர்தலில் ஆறு முனை போட்டி நிலவுகிறது.