லண்டன்: டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் பட்டத்தை முதன்முறைாக கைப்பற்றினார் கிரிஸின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ்.
இதில் ஆண்ட்ரே அகாசி குழுவில், ரபேல் நடால், டேனில் மெட்வேடவ், ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பிஜோன் ஃபோர்க் குழுவில், நோவக் ஜோக்கோவிச், ரோஜர் ஃபெடரர், டோமினிக் தியம், மெட்டியோ பெரிட்டினி ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இத்தொடரில் பல முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேற, இறுதிப் போட்டிக்கு ஆறாம் நிலை வீரரான கிரிஸின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ்சும் ஐந்தாம் நிலை வீரரான டோமினிக் தியாமும் முன்னேறினர்.
பெரும் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியின் முதல் செட்டே ‘டை பிரேக்’ வரை சென்றதால், ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
அதில், டோமினிக் தியாம் கடுமையாகப் போராடி 7-6 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக மீண்டெழுந்த ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், இரண்டாவது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
மூன்றாவது செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாட, அதுவும் ‘டை பிரேக்’ வரை சென்றது.
இந்த செட்டில், இறுதிவரை போராடிய ஸிட்ஸிபாஸ், 7-6 என கைப்பற்றி பட்டத்தைத் தனதாக்கினார். 21 வயது ஸிட்ஸிபாஸ் இத்தொடரில் விளையாடிய எட்டு வீரர்களில் ஆக இளையவராவார்.