புதிய அதிபரின் நிர்வாகத்துக்கு உதவியாக இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குரல் கொடுத்துள்ளார்.
தேர்தலில் வென்று அதிபர் பொறுப்பை ஏற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமும் சீனாவுடனும் பாகிஸ்தானு டனும் நெருங்கிய உறவு வைத்துள்ளது. வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் 1970களில் இளம் ராணுவ அதிகாரியாக பாகிஸ்தானில் பயிற்சி பெற அனுப்பப்பட்டவர் கோத்தபய ராஜபக்சே. அப்போது இலங்கை-பாகிஸ்தான் இடையே நெருங்கிய நட்பு நிலவியது. அதேபோல ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது இலங்கையின் தற்காப்புத் துறை செயலாளராக இருந்தவர் கோத்தபய.
இலங்கை ராணுவத்துக்கு அப்போது பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவு தெரிவித்திருந்தது. பல உதவிகளையும் செய்தது. தற்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு சாதகமானவர்; காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவை ஆதரித்தவர்; 2016ல் ‘சார்க்’ மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்டபோது அதனைப் புறக்கணித்தவர்.
தேர்தல் முடிவு தலைகீழாக மாறி சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருந்தால் அது பாகிஸ்தானுக்கு பேராபத்தாக போயிருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ‘எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’ செய்தித்தாளிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தானைப் பொறுத்தவரை கோத்தபயவின் வெற்றியை எங்களுக்கு சாதகமானதாகக் கருதுகிறோம் என்றார்.
எனவே பாகிஸ்தானின் முதல் குறி ரணிலுக்கு எதிராகவே இருக்கக்கூடும். பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்து ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முயற்சிக்கலாம். ராஜபக்சே குடும்பத்துக்கும் ஆகாதவர்தான் ரணில். எனவே அவரது பதவிக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது.
விரைவில் அவர் அகற்றப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்று புதிய அதிபர் கோத்தபயவை ரணில் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார்.
புதிய அமைச்சரவைக்கு வழிவிட்டு தமது பிரதமர் பதவியைத் துறக்க ரணில் முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இலங்கையின் திருத்தப்பட்ட சட்டப்படி நாடாளுமன்றத்தை 2020 மார்ச்சுக்குப் பின்னரே அதிபரால் கலைக்க முடியும்.
பிரதமர் தாமாக முன்வந்து பதவி விலகி நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்கலாம். ரணில் அந்த முடிவுக்கு வந்திருப்பதால் எந்த நேரமும் அவர் தமது பதவியைக் கைவிடக்கூடும். இது ஏற்கெனவே எதிர்பார்க்கப் பட்டதுதான் என்கிறார்கள் அர சியல் நடுநிலையாளர்கள்.
புதிய பிரதமராக கோத்தபயவின் அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே ஆகக்கூடும் என்று இலங்கை ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ரணில் பதவி விலக வேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமது 74வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்த சமய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பல கேபினட் அமைச்சர்கள் விலகிவிட்டதால் பொதுத் தேர்தலை நடத்த சரியான நேரம் இது. அதிபரும் அமைச்சர்களும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அரசாங்கம் ஆற்றல்மிக்கதாக இருக்கும்,” என்றார் மகிந்த.