கோலாலம்பூர்: சிங்கப்பூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த மலேசிய பயங்கரவாதி யாஸிட் சுஃப்பாட், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவிக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நான்கு டன்கள் எடையில் அம்மோனியம் நைட்ரேட்டைக் கொண்டு இந்தத் தாக்குதலை மேற்கொள்ளவிருந்த 55 வயது உயிர்வேதியியலாளர், அமெரிக்காவில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. பேரழிவை ஏற்படுத்தும் நோக்கில் அல்-காய்தா அமைப்புக்காக ஆயுதங்கள் தயாரித்ததாக நம்பப்படும் யாஸிட், நேற்று சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இம்மாதம் கூடிய மலேசியாவின் பயங்கரவாதத் தடுப்புக் கழகம், யாஸிட்டை விடுதலை செய்ய முடிவெடுத்ததை அடுத்து, ஈராண்டு சிறைவாசத்திற்குப் பின் யாஸிட் விடுதலை ஆனதாகக் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகளைப் பொறுத்தவரை, யாஸிட் தன் தவற்றை உணர்ந்து திருந்தி உள்ளதன் நம்பிக்கையில் விடுதலை செய்திட கழகம் முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாஸிட் ஒரு மின்னணு கண்காணிப்புக் கருவியை ஓராண்டுக்கு அணிந்திருக்க வேண்டும். இதன்படி யாஸிட் சிலாங்கூரிலுள்ள அம்பாங் பகுதியில் மட்டுமே இருக்கவேண்டும் என்றார் போலிஸ் பேச்சாளர் ஒருவர். மூத்த அல்-காய்தா உறுப்பினர்கள் யாஸிட்டின் வீட்டில் பலமுறை கூட்டம் நடத்தியுள்ளதாகவும் ஒரு கூட்டத்தின் போது அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதல் குறித்துப் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு நேரடி தொடர்புடைய ஒரே மலேசியர் யாஸிட் என்றும் நம்பப்படுகிறது.