கோலாலம்பூர்: ஒருவர் கவனமின்றி இருக்கும்போது அவரது பைகளில் பொருட்களை திணித்து பின்னர் அந்தப் பொருட்களைத் திருடியதாகக் கூறி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலுக்கு பலியாக வேண்டாம் என்று மலேசிய போலிஸ் தலைமைத் தளபதி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். இவர்களின் குறி பெரும்பாலும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கும் அல்லது பெருவிரைவு ரயில் நிலையங்களில் தற்செயலாக இருக்கும் வெளிநாட்டவர் என்று சமூக ஊடகங்களில் உலவும் எச்சரிக்கை தகவல்களை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி நிறுவனம் கூறுகிறது.
"இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஆளாவோர் குற்றம் சுமத்துபவர் களை எவ்விதத் தயக்கமுமின்றி அவர்களை அழைத்துக் கொண்டு போலிஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும்," என்று போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பக்கர் விளக்கினார்.
"இதுபோன்ற பிரச்சினையை நீங்களாகவே தீர்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏனெனில், இவர்களுக்கு போலிஸ் நிலையம் செல்லும் துணிவு இருக்காது," என்று அவர் மேலும் கூறினார். இந்தக் குற்றக் கும்பல் கைபேசி, பணப் பை போன்றவற்றை ஒருவரது கால்சட்டை பைகளில் திணித்து பின்னர் அது திருடப் பட்டதாகக் கூறி, மிரட்டி பணம் பறிக்க முயலுவர் என்று அறியப் படுகிறது. இதில் பாதிக்கப் பட்டவர்கள் பயத்தினால் பணம் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பர் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. எனினும், இதன் தொடர்பில் இதுவரை எந்தப் புகாரும் வர வில்லை என்று கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு துறைத் தலை வர் ருஸ்டி முகமது இசா கூறி யுள்ளார்.