நன்யாங் நுண்கலைக் கழகத்தின் (நாஃபா) கலை வகுப்புகளுக்குப் பதிய 300க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கடந்த சனிக் கிழமை (நவம்பர் 30) இரவு முழுவதும் அக்கழகத்தின் பென்கூலன் வளாகத்தில் நாற்காலிகள், தூங்கப்பயன்படுத்தும் பைகள், யோகா பாய்கள், சிற்றுண்டிகள் ஆகியவற்றுடன் காத்திருந்தனர்.
நாஃபாவின் கலை செறிவூட்டு வகுப்புகளுக்குத் தகுதி பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் வகுப்பு நேரத்தைத் தேர்வு செய்ய முதலில் வருவோருக்கு முதற்சலுகை என்ற அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், பெற்றோர்கள் இரவு முழுவதும் காத்திருக்க முடிவு செய்தனர்.
திருவாட்டி பாய் என்று அழைக்கப்படும் தாயார் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.35 மணிக்கு வரிசையில் ஒன்பதாவது நபராக நிற்கக் தொடங்கினார். பதிவு காலை 9 மணிக்குத்தான் தொடங்கியது. தமது மகனுக்கு சனிக் கிழமை காலை 11 மணி வகுப்பை உறுதிசெய்ய தாம் காத்திருப்பதாக அவர் தி நியூ பேப்பரிடம் தெரிவித்தார்.
வகுப்பு நேரத்துக்கான பதிவு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு முடிவுற்றாலும் அங்கிருந்த கூட்டம் கலைய பிற் பகல் 3 மணி ஆகிவிட்டது.
இளையர் கலைத்துறை 1976ஆம் ஆண்டு தொடங்கியபோது 100க்குக் குறைவான மாணவர்களே அதில் சேர்ந்தனர். ஆனால் இப்போது அதில் 3,000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள் என்று நாஃபா இணையத்தளம் குறிப்பிட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity