கோயம்புத்தூர்: காதலியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பின் விரக்தியுடனும் ஆத்திரத்துடனும் இருந்த காதலன், காதலியின் நிர்வாணப் படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் அஜித்குமார் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது இவரது ஊரைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி சூலூரில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
அஜித்குமாரும் கல்லூரி மாணவியும் நட்பாகப் பழகிவந்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் தினமும் வாட்ஸ்-அப் மூலம் காணொளி அழைப்பில் பேசி வந்தனர்.
தொடர்ந்து அவர்களிடையே நெருக்கம் அதிகரித்ததால் இருவரும் நிர்வாண நிலையில் கைத்தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினி மூலம் காணொளி அழைப்பில் பேசி உள்ளனர். மேலும் குளியல் அறை காணொளியையும் மாணவி அஜித்குமாருக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், மாணவி நிர்வாண நிலையில் இருக்கும் காணொளிகளை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து சூலூர் போலிசில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த மாணவியின் நிர்வாணக் காணொளிகளைப் பறிமுதல் செய்தனர். அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலிசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த ஆண்டுக்கு முன்பு எனது சொந்த ஊரில் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் நாங்கள் இருவரும் நட்பாகப் பழகி வந்தோம். தற்போது அந்த மாணவி சேவூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
நாளடைவில் எங்களது நட்புக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வாட்ஸ்-அப் காணொளி அழைப்பில் பேசிவந்தோம். அப்போது நாம்தான் திருமணம் செய்யப்போகிறோமே என ஆசைவார்த்தை கூறி நிர்வாண நிலையில் பேச அவரைச் சம்மதிக்க வைத்தேன். அவ்வாறு அவர் என்னிடம் பேசிய காணொளிகளை பத்திரமாக எனது கையடக்கக் கணினியில் சேமித்து வைத்துள்ளேன்.
நாளடைவியில் அவளிடம் நிர்வாணமாகக் குளிக்கும் காணொளிகளை எடுத்து அனுப்பும்படி கூறினேன்.
முதலில் மறுத்த அவள் அந்தக் காணொளியையும் எனக்கு எடுத்து அனுப்பினாள். அதனையும் நான் சேமித்து வைத்துக்கொண்டேன்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளைப் பழிவாங்கும் எண்ணத்தில் நான் சேமித்து வைத்து இருந்த நிர்வாண காணொளிகள் சிலவற்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினேன். மேலும் அவளுடைய உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாக நிர்வாணக் காணொளிகளை அனுப்பிவைத்தேன்.
காணொளியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள், எதற்காக காணொளிகளை வெளியிட்டாய் என்று கேட்டுக் கதறி அழுதுள்ளார்.
அதற்கு நான் இது குறித்துப் போலிசில் புகார் செய்தால் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். தற்போது அவளது பெற்றோர் போலிசில் புகார் செய்ததால் நான் சிக்கிக் கொண்டேன் என அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர், அஜித்திடம் இருந்த காணொளிகளைக் கைப்பற்றி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர்.