அறுபது ஆண்டுகளில் முதல்முறையாக மண்டாய் பகுதியில் வாழும் வனவிலங்குகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாலையைக் கடக்கத் தேவையில்லை. மண்டாய் லேக் ரோட்டில் நேற்று திறக்கப்பட்ட புதிய மண்டாய் வனவிலங்கு பாலம் வழி அவை சாலையின் மறுமுனைக்குச் செல்லலாம்.
சாலைக்கு மேலே கிட்டத்தட்ட 140 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், சாலையின் இரு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதி களை இணைக்கிறது.
“இயற்கை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் அடிக்கடி மண்டாய் லேக் ரோட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு வந்து போகின்றன. அதனால் இந்தப் பகுதியில் பாலம் அமைத்தது ஒரு முக்கிய மைல்கல்.
மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியை ஒன்றிணைக்கும் இப்பாலம், நம் உள்ளூர் வனவிலங்குகளுக்கு ஒரு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தித் தருகிறது,” என்றார் மண்டாய் பார்க் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாகி மைக் பார்கிலே.
ஓர் ஒருங்கிணைந்த இயற்கை மற்றும் வனவிலங்குப் பகுதியாக மாற மண்டாய்க்குப் புதுப்பொலிவு தர இப்பாலம் முதல்படி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மண்டாய் பகுதியில் ஐந்து வனவிலங்கு இடங்களை அமைப்பதற்காக நடந்த கட்டுமான வேலை களால் வனவிலங்குகள் இடம்பெயரும் முயற்சியில் சாலையில் அடிபட்டு இறந்தன.
இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இப்பாலம், சாலை விபத்துகளில் விலங்குகள் சிக்கி இறந்த சம்பவங்களால் உருவெடுத்தது. தற்போது மண்டாய் பகுதியில் அமைந்துள்ள சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ‘நைட் சஃபாரி’, ‘ரிவர் சஃபாரி’ ஆகியவற்றுடன் புதிய ‘ரெய்ன்ஃபாரஸ்ட்’ பூங்காவும் பறவைப் பூங்காவும் இணையவுள்ளன.
இதற்கு முன்பாக வனவிலங்குகள் சாலையைக் கடப்பதற்காக கயிற்றால் ஆன பாலங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் அப்பகுதியை அணுகும் வாகனமோட்டிகளும் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்வதற்கான அறிவிப்புகளும் சாலையில் வைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 17 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான 9 ஹெக்டர் நிலப்பரப்பை 2030ஆம் ஆண்டுக்குள் இந்த வனப்பகுதிக்காக ஒதுக்கி விரிவுபடுத்துவதே திட்டம் என்றது மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ்.