லண்டன்: பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்று சொல்லப்படுவது உண்டு. அது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனலைப் பொறுத்தவரை ஓரளவுக்கு உண்மையும்கூட.
முன்னாள் நிர்வாகியான ஆர்சின் வெங்கரை வெளியே போகச் சொன்ன பிறகு அவருக்குப் பின்னர் வந்த உனாய் எமேரியும் அந்தக் குழுவை நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை என்று கூறி அவரையும் நிர்வாகிப் பதவியிலிருந்து நீக்கியது.
தற்பொழுது முன்னாள் ஆர்சனல் வீரரான ஃபிரடி லுங்பர்க் என்பவர் நிர்வாகியாக உள்ளார்.
இவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஆர்சனல் முனைப்புடன் விளையாடுகிறதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்ற வாரக் கடைசியில் நார்விச் குழுவிடம் 2-2 என சமநிலை கண்ட ஆர்சனல், நேற்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் 1-2 என பிரைட்டன் குழுவிடம் தோல்வி கண்டது.
இத்தனைக்கும் நார்விச்சும் பிரைட்டனும் பிரிமியர் லீக் தரவரிசையில் கீழ்நிலையில் உள்ள குழுக்கள் என்பது இங்கு
நினைவுகூரத்தக்கது.
நேற்றைய ஆட்டத்தின் முதல் கோலை பிரைட்டன் போட, ஆர்சனல் லக்காசெட் என்பவர் மூலம் சமன் செய்தது. ஆனால், ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும்போது பிரைட்டனின் நீல் மெளபே என்பவர் இரண்டாவது கோலை போட்டு ஆர்சனலுக்கு தலைவலியைக் கொடுத்தார்.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஆர்சனல் தரவரிசையில் 10வது இடத்துக்குச் ெசன்றுள்ளது.
அத்துடன், சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெறக்கூடிய பிரிமியர் லீக் தரவரிசையின் நான்காம் இடத்தில் இருக்கும் செல்சியைவிட 10 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் லுங்பர்க் ஆர்சனலுக்கு நிரந்தர நிர்வாகியாக நியமிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்று கூறும் பிபிசி செய்தித் தகவல் நேற்றைய ஆட்டத்தைக் காண குறைந்த அளவிலான ஆர்சனல் ரசிகர்களே மைதானத்துக்கு வந்திருந்ததாகக் கூறுகிறது.
அவர்களில் பலர் ஆட்டத்தின் முடிவில் வீரர்களை நோக்கி கேலியாகக் கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதல் பாதி ஆட்டத்தில் பிரைட்டன் விளையாடியதை வைத்துப் பார்த்தால் அது பல கோல்களைப் போட்டிருக்க வேண்டும் என்று ெசய்தித் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆட்ட உத்திகளில் லுங்பர்க் செய்த மாற்றங்களால் ஆர்சனல் சற்று உயிரோட்டமுடன் விளையாடியதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதில் ஆர்சனலின் ஒபமயாங் அருமையான கோல் போடும் வாய்ப்பை வீணடித்தார் என்றும் மற்றோர் சந்தர்ப்பத்தில் டாவிட் லுயிஸ் போட்ட கோல் அவர் ஆஃப்சைட் நிலையிலிருந்ததால் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மற்றோர் ஆட்டத்தில் நியூகாசல் குழு ஆட்ட நேரத்தில் 27 விழுக்காடு மட்டுமே பந்தைத் தன் வசம் வைத்திருந்தபோதிலும் ஷெஃப்பீல்ட் யுனைடெட் குழுவை 2-0 என்று வெற்றி கொண்டது.