கொங்ஷாங் தொடக்கப்பள்ளியில் அறிவியல், கணிதப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. பெற்றோர்கள் பலர் அவர் மேல் அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "பெற்றோர்கள் பலரைச் சந்தித்து உரையாடிய பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டது. விசாரணை முடியும் வரை கற்பிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டிருக் கிறது," என்று பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் திரு ஜார்ஜ் சியா சொன்னார்.
அந்த ஆசிரியை மாணவர் களைத் துன்புறுத்தியதாக பெற்றோர் பத்து பேர் பள்ளி தலைமையாசிரியரிடமும் துணைத் தலைமையாசிரியரிடமும் முறை யிட்டுள்ளனர். வகுப்பறையில் மாணவர்கள் சிலரை அவர் மனநலம் குன்றிய குரங்குகள் என அழைத்ததாகவும் சில மாணவர்களை வகுப்பறை யில் மண்டியிட அல்லது தரையில் உட்கார வைத்ததாகவும் அவர் மீது பெற்றோர் புகார் கூறினர்.
அந்த ஆசிரியை மார்க்கர் போன்ற பொருட்களைத் தூக்கி எறிந்ததாகவும் அது ஒரு பையனின் முகத்தை தாக்கிய தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 வயது திருவாட்டி ஜோசப் பின் சுவா இதுபற்றிக் கூறுகையில் இந்தாண்டு, தனது மகனை மூன்று முறை வகுப்பில் மண்டி யிடச் செய்ததாகக் கூறினார். இதற்கிடையே, கல்வி அமைச்சை நேற்று முன்தினம் தான் தொடர்பு கொண்டதாகவும் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களை அமைச்சு கடுமையாகப் பார்க்கிறது, சட்ட திட்டத்திற்கு உட்படாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் பேச்சாளர் கூறியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. விசாரணை தொடர்வதாக அமைச்சு கூறியது.