தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா நால்வரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள். இந்த நால்வரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர். மாமா, மச்சான் என்று அழைத்துக்கொண்ட இவர்கள் ஒற்றுமையாக இருந்ததால்தான் நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதா ரவியை எதிர்த்துக் கேள்வி கேட்டு நடிகர் சங்கத்தைக் கைப்பற்ற முடிந்தது.
சிவக்குமார் குடும்பத்துடன் விஷால் இணையும் வரை ஆர்யாவும் விஷாலும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள். சங்கத் தேர்தலுக்காக சூர்யா, கார்த்தி இருவரின் ஆதரவைப் பெற நடிகர் சூர்யா குடும்பத்துடன் விஷால் நெருக்கமானார். அதன் பின்னர் சிறிது சிறிதாக ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா மூவரும் விஷாலிடமிருந்து விலக ஆரம்பித்தார்கள். ஆர்யாவும் விஷாலும் பிரிவதற்கு விஷ்ணு நடித்த 'ஜீவா' படம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அந்தப் படத்தை ஆர்யா தயாரிக்க, விஷால் வெளியிட்டார். அதில் ஆரம்பித்த பண விவகாரம்தான் இவர்கள் பிரிவுக்குக் காரணம் என்கிறது கோலிவுட்.
முன்பு இவர்கள் நால்வரும் இணைந்து சம்பளம் பெறாமல் ஒரு படத்தில் நடித்து அதில் வரும் வருமானம் அனைத்தையும் நடிகர் சங்கக் கட்டட நிதிக்குக் கொடுப்பது என்று முடிவெடுத்திருந்தனர். தற்பொழுது இந்தக் கூட்டணி பிரிந்ததால் விஷால், கார்த்தி இருவர் மட்டும் நடிக்க முடிவெடுத்து இருக்கின்றனர். இந்தப் படத்தில் சிறிய வேடத்தில் சூர்யாவும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.