இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் பங்காற்றியுள்ள 200 மனிதர்களின் வரலாற்றை நூலாக இயற்றி நேற்று வெளியிட்டது சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்.
கடந்த 1940ஆம் ஆண்டில் இருந்து இவ்வாண்டு வரை தொண்டு செய்து பங்காற்றியுள்ளவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பேர் இந்த நூலில் இடம்பெற்றுள்ளனர்.
சமுதாயத்திற்குப் பங்காற்றியவர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட வரலாற்றுப் பெட்டகமாக இந்த நூல் விளங்கும் என்று கூறிய இந்நூலின் தலைமை ஆசிரியர் முனைவர் அ.வீரமணி, 1940ஆம் ஆண்டு முதல் தமிழுக்கும் தமிழருக்கும் பங்காற்றியோர் ஏராளமானோர் இருப்பதால் அடுத்த ஐந்தாண்டுகளில் இதைப் போன்ற மேலும் நான்கு நூல்களை வெளியிடத் திட்டம் இருப்பதாகக் கூறினார்.
ஆக மொத்தம் 1,000 பேரின் வரலாற்றைப் பதிவு செய்வது மன்றத்தின் நோக்கம்.
“ஏற்கெனவே திரு சரவணமுத்து தம்பிப்பிள்ளை என்பவர் 1870களுக்கும் 1930களுக்கும் இடையில் வாழந்த மனிதர்களின் வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார். அதனால் இந்த நூல் 1940களிலிருந்து வாழ்ந்த தமிழர்களை முன்வைத்து வெளியீடு காண்கிறது,” என்றார் ஜப்பானின் ரிட்சுமெய்கன் ஆசிய பசிஃபிக் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியர் முனைவர் அ.வீரமணி கூறினார்.
“நமது வரலாற்றில் தமிழை முன்வைத்து தொண்டாற்றியவர்கள் ஏராளம். நமது வரலாறு முழுமைபெற இதுபோன்ற தனி மனிதர்களின் வரலாறு நிச்சயம் உதவும்.
“அதனால் முக்கிய மனிதர்களின் ஆழமான தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்க முடிவெடுத்தோம். நம் சமூகத்தின் வரலாறு நிலைபெற இது வாய்ப்பளிக்கும்,” என்றார் திரு வீரமணி.
“இன்றைய தலைமுறையினர் தங்களுக்கு முன்பிருந்த இரண்டு தலைமுறையினரை அடையாளம் காண்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதுபோன்ற பதிவுகளால் ஐந்தாறு தலைமுறையினரின் வரலாற்றை அறிவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் நூலின் இணையாசிரியர்களில் ஒருவரான திருவாட்டி மாலதி பாலா.
“எந்தப் பாகுபாடுமின்றி இருநூறு பேரைத் தேர்ந்தெடுப்பது எங்களது முதல் சவால். நேர்த்தியான முறையில் விதிமுறையை உருவாக்கி அதன்படி தகுதிவரம்பை மீறாமல் 200 பேர் எவர் என்பதை முடிவுசெய்தோம்,” என்றார் அவர்.
இந்த நூல் ஈராண்டு முயற்சி என்றாலும் 2016ஆம் ஆண்டிலேயே இதற்கான திட்டத்தை முனைவர் வீரமணி வகுத்திருந்தார் என்றும் அவர் கூறினார்.
மொத்தம் 138 பேர் இந்த நூலை உருவாக்கக் கைகொடுத்துள்ளனர். அதில் ஆக இளையவரின் வயது பதின்மூன்று. மூத்தவருக்கு 72 வயது.
“பலரின் கட்டுரைகளைத் தொகுத்து நேர்த்தியாகவும் ஒரே நிலையில் சீராகக் கொண்டுவருவது மிகச் சவாலான பணியாக இருந்தது,” என்றார் மன்றத்தின் தலைவர் திரு மா.பாலதண்டாயுதம்.