பொங்கல் திருநாள் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாவாக மாறியுள்ளதை அற்புதம் என்று நேற்று குறிப்பிட்டு பாராட்டினார் அமைச்சர் இந்திராணி.
லிட்டில் இந்தியாவில் பொங்கல் ஒளியூட்டை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி ஆகியவற்றுக்கு இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மட்டுமன்றி பொங்கல் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பரவியுள்ளன.
கிட்டத்தட்ட 1827ஆம் ஆண்டில் சிராங்கூன் ரோடு பகுதியில் மாட்டுப் பண்ணைகளை அமைத்திருந்த ஆரம்பகால தென்னிந்திய குடியேறிகளுடன் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டங்கள், 1920கள் முதல் 1950கள் வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
மாட்டுப் பண்ணைகளின் இட மாற்றத்தாலும் நகரமயமாதலாலும் 1960களில் பொங்கல் கொண்டாட்டம் குறையத் தொடங்கியது.
இந்நிலையை ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமை சங்கம், மாற்றி பொங்கல் திருநாளுக்குப் புத்துயிர் அளித்துள்ளதாக குமாரி இந்திராணி தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
லிஷாவுடன் பல பங்காளிகள் கைகோர்ப்பது இவ்வாண்டின் கொண்டாட்டக் கருப்பொருளான ‘கம்பத்து பொங்கல்’ பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
“மாணவர்களை இந்திய பாரம்பரிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் இக்கொண்டாட்டங்கள் நிலையான நினைவுகளை உருவாக்கித் தருகின்றன.
“அத்துடன் பல சுற்றுப்பயணிகளின் முதல் பொங்கல் அனுபவம் சிங்கப்பூரில்தான் ஏற்படுகிறது,” என்றார் அவர்.
இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் கலாசாரம் ரீதியாக சிங்கப்பூருக்கு உண்மையான பரிசும் பொக்கிஷமும் கிடைத்துள்ளதாகக் கூறினார் அமைச்சர் இந்திராணி.
கேம்பல் லேனில் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கூடாரத்தில் ஒளியூட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒலி 96.8 வானொலி படைப்பாளர்கள், ‘யார் அந்த ஸ்டார்’ பாட்டுத் திறன்போட்டி கலைஞர்கள், இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள் ஆகியோர் மேடையேறி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் இடம்பெற்றுவரும் பொங்கல் ஒளியூட்டும் கொண்டாட்டங்களும் ஆண்டுக்காண்டு விரிவடைந்து வருவதாக நிகழ்ச்சியைக் காண வந்த ஆறுமுகம் ராஜசேகரன், 36, சொன்னார்.
கலைநிகழ்ச்சிகள், கூட்டுப் பொங்கல், பயிலரங்குகள் போன்றவற்றுடன் பொங்கல் கொண்டாட்டங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீடிக்கும்.