மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் குறிப்பாக மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றவை.
இந்த நிலையில் இவ்வாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி மதுரை அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் பாலமேட்டில் 16ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசுவது, பார்வை யாளர்கள் மாடம் அமைப்பது, தடுப்புகள் அமைப்பது என ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் பணிகளை மேற்பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளை பிடிக்க அனுமதியில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போர் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என உத்தரவுகளைப் பிறப்பித்தார். மேலும் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனையும் மாடுபிடி வீரர்கள் பதிவு செய்வதற்கான முகாமும் நடைபெற்று வருகின்றன.