லின்கன்: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
‘டாஸ்’ வென்ற இந்தியா ஏ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்தடிக்கத் தொடங்கி 230 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பிறகு ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். அகர்வால் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 35 பந்துகளில் 5 பவுண்டரி,
3 சிக்சர்களுடன் 48 ஓட்டங்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
இறுதியில் இந்தியா ஏ அணி 29.3 ஓவரில் 231 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா ஏ அணியின் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் கலீல் அகமது, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி னர்.
நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி ஏற்கெனவே வெற்றி பெற்றது.