இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவில், இந்தியாவின் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில், முப்படைகளைச் சேர்ந்த பீரங்கிகள், கவச வாகனங்கள் அணிவகுப்பில்் இடம்பெற்றன.
அணிவகுப்பில் முதன்முறையாக சின்னூக் மற்றும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. இவை அண்மையில் இந்திய ஆகாயப்படையில் இணைக்கப்பட்டன.
இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான டி-90 பீஷ்மா பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றன.
269 மீடியம் ரெஜிமன்ட்டின் கே-9 வஜ்ரா - டி பீரங்கிகளைக் காண மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.
அணிவகுப்பில் ஆயுதம் பொருத்தப்பட்ட இலகுரக ருத்ரா ஹெலிகாப்டர்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் இடம்பெற்றன.
ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த சீக்கிய காலாட்படை வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர். கடலில் நீண்டதூரம் சென்று ரோந்துப் பணியில் ஈடுபடும் போயிங் பி8ஐ விமானம் இடம்பிடித்தது.
இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் அணி
வகுப்பில் பங்கேற்றனர்.
தலைநகர் புதுடெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் இந்தியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் பன்முகக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெவ்வேறு மாநிலங்களின் கலாசாரத்தைக் காட்டும் மிதவைகள் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
தமிழகத்தின் சார்பில் ஐயனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார மிதவை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் காவல் தெய்வமான ஐயனாரின் கம்பீரமான சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 17 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ஐயனார் சிலைக்கு முன்னால் குதிரையும் காவலாளிகளும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்திய குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.
குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் போல்சனரோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவையொட்டி புதுடெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி
விடப்பட்டன.
அதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர்கள் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதிக்குப் பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு பணியில்
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி நாராவனே, கடற்படை தலைமைத் தளபதி கரம்பீர் சிங், ஆகாயப்படை தலைமைத் தளபதி ஆர்.கே. சிங் பதோரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
காஷ்மீர் உட்பட இந்தியா முழுவதும் 71வது குடியரசு தினம் விமரிசையாகக் கொண்டாடி வந்த நிலையில் அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் நேற்று காலை திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து போலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து விசாரணை நடத்தினர்.
குண்டுவெடிப்புக்கு காரணமானோரைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோதும் இந்தியாவெங்கும் குடியரசு தின விழா களைகட்டியது.