புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றுப் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தற்போது 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அவசியமின்றி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா கிருமித் தாக்குதல் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து சீனா சென்று வரும் பயணிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரு, ஹைதராபாத்தில் தலா ஒருவர் என சீனாவில் இருந்து நாடு திரும்பிய 11 பேர் மருத்துவ
மனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்
களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சீனாவிலிருந்து கேரளாவுக்கு வந்த 7 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
7 பேரின் ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை இந்தியாவில் யாருக்கும் கோரோனா கிருமி பாதிப்பு இல்லை என்றார்.
ஆனால், சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மும்பை நபர் ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பதை புனே நகரில் உள்ள ஆய்வுக்கூடம் உறுதி செய்துள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
அதேபோல் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவருக்கும் கொரோனா கிருமி தொற்று இருப்பது உறுதியானதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கொச்சி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.