லாஸ் ஏஞ்சலிஸ் : மக்கள் பலரையும் கூடைப்பந்து விளையாட்டுக்கு ஈர்த்த உலகின் தலைசிறந்த கூடைபந்து வீரரான கோபெ பிரையண்ட்டின் மரணத்திற்கு உலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் அருகில் உள்ள கலாபசாஸ் மலைப்பகுதிக்கு அருகில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த கூடைப்பந்து வீரர் 41 வயது கோப் பிரையண்ட், அவரது 13 வயது மகள் கியன்னா உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.
லாஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடிய இவர், கடந்த 2016ஆம் ஆண்டு விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார். 5 முறை என்பிஏ வெற்றியாளர் பட்டத்தையும் ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.
இவரது மரணத்துக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டிகாப்ரியோ, இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“பிரையண்ட்டின் மனைவி வனெஸ்ஸாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் நானும் மெலனியாவும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவரது மகளின் இழப்பு இத்தருணத்தை மேலும் மோசமாக்குகிறது,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கோஹ்லி தனது இரங்கல் செய்தியில் “பிரையண்ட்டின் மறைவு செய்தியை கேட்டு நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்,” என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.