அதிக ஆபத்தை எதிர்நோக்கும் சீன மருத்துவ ஊழியர்கள்
பெய்ஜிங்: கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீன மருத்துவ ஊழியர்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டின் அண்மைய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
சென்ற 11ஆம் தேதி வரையிலான கொவிட்-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட, சந்தேகத்திற்குரிய சுமார் 72,314 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட தகவலை சீனா நேற்று வெளியிட்டது.
சீன நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையின் படி, சுமார் 80 விழுக்காட்டினர் லேசாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13.8 விழுக்காட்டினர் கடுமையாகவும் 4.7 விழுக்காட்டினர் மட்டுமே ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வயதானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களுமே ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 2.3 விழுக்காடாக இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் இறப்பு விகிதம் 2.9 விழுக்காடாக உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் 0.4%.
இதில் ஆக அதிகமாக 79 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 14.8 விழுக்காடாகவுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் இதய நோய் உள்ளவர்கள் எனவும், அதைத் தொடர்ந்து நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மருத்துவ ஊழியர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது.
மொத்தம் 3,019 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1,716 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது
மேலும் ஐந்து மருத்துவ ஊழியர்கள் இதுவரை மாண்டுள்ளனர்.
அவர்களில் கிருமித் தொற்று குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, சீன போலிசாரால் கைது செய்யப்பட்ட லீ வென்லியாங் என்ற மருத்துவரும் அடங்குவார்.
இதற்கிடையே, கிருமித் தொற்று காரணமாக சீனாவின் வூஹான் வூசாங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் நேற்று மாண்டார்.
மருத்துவர் லியுவின் மரணம் அந்நாட்டு மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நெருக்கடியைத் தவறாக கையாண்டதாக சீன அதிகாரிகளுக்கு எதிரான மக்களின் கோபத்தையும் தூண்டியது.
நேற்றைய நிலவரப்படி கிருமித் தொற்றால் 72,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,868 பேர் மாண்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது.