சிபு: இணையம் வழியாக 20,000 முகக்கவசங்களை வாங்க முயன்ற தொழிலதிபர் ஒருவர், மோசடியில் சிக்கி 266,153 ரிங்கிட் (S$89,000) பணத்தை இழந்த சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று எதிரொலியால் சிங்கப்பூரில் முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதால் மலேசியாவில் கிடைக்குமா எனப் பார்க்கச் சொல்லி நண்பர் ஒருவரிடம் இருந்து அந்த 36 வயது ஆடவருக்கு நேற்று முன்தினம் 7 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததாக சிபு போலிசார் தெரிவித்தனர்.
“பின்னர் அந்த ஆடவர், தமக்கு முகக்கவசங்கள் தேவைப்படுவதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சற்று நேரத்தில், ஹெஸ்டன் சியா எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் அவரைத் தொடர்புகொண்டார். ஒரு பெட்டி முகக்கவசங்களை $14க்குத் தாம் விற்று வருவதாக ஹெஸ்டன் கூறியுள்ளார்,” என்று போலிசார் விவரித்தனர்.
இதையடுத்து, தமக்கு 20,000 முகக்கவசங்கள் தேவை எனக் கேட்டுக்கொண்டதோடு, அதற்கான பணத்தையும் அந்த ஆடவர் செலுத்திவிட்டார்.
பின்னர் சிங்கப்பூரில் உள்ள தன் நண்பரைத் தொடர்புகொண்டு, அவரது வீட்டு முகவரிக்கே முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று அந்த ஆடவர் தகவல் தெரிவித்தார். ஆனால், சொன்னபடி முகக்கவசங்கள் வந்து சேரவில்லை. ஹெஸ்டனும் மாயமாகிவிட்டார்.
இது குறித்து மலேசிய போலிசார் விசாரித்து வருகின்றனர்.