கிழக்கு- மேற்கு வழித்தடத்தில் நேற்று பிற்பகல் நேரத்தில் ரயில் சேவை தாமதம் அடைந்தது. நடைமேடைக் கதவுகளில் பிரச்சினை ஏற்பட்டதே அதற்குக் காரணம் என்று தெரிகிறது. பூகிஸ் நிலையத்திற்கும் பாசிர் ரிஸ் நிலையத்திற்கும் இடையில் பயணம் செய்ய கூடுதலாக 15 நிமிடம் பிடிக்க லாம் என்று நேற்று பிற்பகல் 4.54 மணிக்கு டுவிட்டரில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. பிறகு தனது பொறியாளர்கள் பிரச்சினையைக் கவனித்து வருவதாக அது மாலை 5.18 மணிக்கு டுவிட்டரில் குறிப்பிட்டது. டுவிட்டரில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை வைத்துப் பார்க்கையில், கெம்பங்கான் ரயில் நிலையத்தில் நடைமேடைக் கதவுகளில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
நடைமேடைக் கதவு திறக்காமல் போனதால் அந்த நிலையத்தில் ரயில்கள் நின்றுவிட்டதாக பிற்பகல் 4.29 மணிக்கு @mayzeit என்ற டுவிட்டர் பயனீட்டாளர் தெரி வித்தார். கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க வேண்டி யிருந்தது என்று அந்த மாது கூறினார். ஸி சியான் என்ற மற்றொரு பயணி, அந்த ரயில் நிலையக் கதவுகளில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டு விட்டதாக டுவிட்டரில் கூறினார். ரயிலுக்கு 20 நிமிடம் காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது என்றும் ரயிலில் ஏறியதும் கெம்பன்கான் நிலையக் கதவுக் கோளாறு பற்றி அறிவிக்கப்பட்டதாகவும் மைக்கல் லிம் என்ற பயணி கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. அல்ஜுனிட் நிலையத்தில் எல்லாரையும் இறங்கும்படி ரயில் ஓட்டுநர் அறிவித்ததாகவும் பலரும் குழப்பமடைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.