கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தெற்கு துவாஸ் பகுதியில் அமைந்துள்ள கட்டுமானத் தளம் ஒன்றை இரவு முழுவதும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளான திரு லோகேஸ்ராஜா நடராஜாவிற்கும் திரு ராமகிருஷ்ணாவிற்கும் இருந்தது.
இருள் சூழ்ந்த அப்பகுதியில் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஊழியர்கள் யாரும் வேலைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் பொதுவாக அனுமதியில்லாத மனிதர்களின் நடமாட்டம் அந்நேரத்தில் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார் மூத்த பாதுகாப்பு அதிகாரியான லோகேஸ்ராஜா, 32.
நள்ளிரவு 12 மணி அளவில் அந்தக் கட்டுமானத் தளத்தின் நுழைவு வாயில் அமைந்திருக்கும் பாதுகாப்புச் சாவடியை அவ்விரு அதிகாரிகளும் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, மூன்று சந்தேக நபர்கள் அந்த கட்டுமானத் தளத்தைவிட்டு வெளியே வருவ தைப் பார்த்தார் லோகேஸ்ராஜா.
அந்த நபர்களிடம் பேச முயன்றபோது அவர்கள் ‘பந்த்து பந்த்து’ என்று மலாய் மொழியில் கத்தி, லோகேஸ்ராஜாவை விலகச் சொன்னார்கள்.
ஆனால் அதற்கு இணங்காமல் தைரியமாக அவர்களைத் தொடர்ந்து நெருங்கியபோது, பதற்றத்துடன் அந்த நபர்கள் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.
பாதுகாப்பு சாவடியைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ராமகிருஷ்ணாவிடம் ஒப்படைத்து விட்டு அந்த மூன்று நபர்களையும் தமது சொந்த மோட்டார் வாகனத்தில் துரத்தினார் லோகேஸ்ராஜா.
“அந்நபர்கள் திடீரென ஓடுவதை நிறுத்திவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். பின்னர் என்னை விலகச் சொன்னார்கள். நான் ஏன் விலகவேண்டும் என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டேன். நீங்கள் ஏன் அனுமதியின்றி கட்டுமானத் தளத்தைவிட்டு வந்தீர்கள் என்று நான் விசாரித்தபோது மறுபடியும் ஓட்டம் பிடித்தனர். அதுமுதல் நான் என் திறன்பேசியில் காணொளி பதிவு செய்யத் தொடங்கிவிட்டேன்,” என்றார் லோகேஸ்ராஜா.
ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்திற்கு துரத்தியதில் ஒரு நபர் இருட்டில் காணாமல் போய்விட்டார் என்றும் மற்ற இரு நபர்கள் ‘செம்ப்கார்ப் மரீன்’ என்ற நிறுவனத்திற்கு அருகே டாக்சி ஒன்றில் ஏறினர் என்றும் சொன்னார் லோகேஸ்ராஜா.
“டாக்சியில் இருவர் ஏறியவுடன் அந்த வாகனத்தின் மீது கவனம் செலுத்தி அதை அணுகினேன். டாக்சி ஓட்டுநர் மலாய்க்காரராக இருந்தார். வாகனத்தில் ஏறிய நபர்கள் மீது சந்தேகம் இருந்ததை அவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன், வேடிக்கையாக சிரித்தார். அந்த நேரத்தில் டாக்சியிலிருந்து ஒருவர் வெளியேறி ஓடிவிட்டார். டாக்சி நிற்காமல் கிளம்பிவிட்டது. மற்றொருவர் ஓடும் திசையில் என் கவனத்தைச் செலுத்தினேன். தொடர்ந்து காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடந்தவற்றைத் தெரிவித்தேன்,” என்றார் லோகேஸ்ராஜா.
ஏறத்தாழ எட்டு நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசாரிடம் முக்கிய ஆதாரங்களையும் விவரங்களையும் வழங்கினார் லோகேஸ்ராஜா. அவர் எடுத்த காணொளிகள், டாக்சி வாகனத்தின் உரிம எண், நபர்கள் அணிந்திருந்த ஆடைகள், சந்தேக நபர்களை இறுதியாக கண்ட இடம் போன்ற முக்கிய தகவல்களைப் போலிசாரிடம் பகிர்ந்துகொண்டார்.
தப்பி ஓடிய இரண்டு நபர்களை அதே நாளில் போலிசார் 20 நிமிடங்களுக்குப் பிறகு பிடித்தனர் என்றும் அவ்விருவரில் ஒருவர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்துகொண்டதாகவும் லோகேஸ் ராஜாவுக்கு தெரியவந்தது.
ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மூன்றாவது நபரும் பிடிபட்டார். இந்த நடவடிக்கை களில் ஏறக்குறைய 100 காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இவ்வாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ஜூரோங் போலிஸ் தலைமையகத்தில் வழங்கப்பட்ட மூன்று பொதுநல உணர்வுமிக்க விருதுகளில் ஒன்றை லோகேஸ்ராஜா பெற்றார்.
சிங்கப்பூரில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் மலேசியரான லோகேஸ்ராஜா தற்போது ‘லிங்க்8 செக்யூரிட்டி’ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
“பாதுகாப்புத் துறை என்பது வேலை என்று சொல்வதைவிடவும் ஒவ்வொருவருடைய கடமையாகும். சிங்கப்பூரில் தவறுகள் நடக்க விடக்கூடாது என்று வலியுறுத்தி தான் பாதுகாப்பு அதிகாரிகளான நம்மை பணியில் அமர்த்துகிறார்கள். சிங்கப்பூரை பாதுகாப்பதில் அனை வருக்கும் பங்குண்டு. வெளிநாட்டவர்களுக்கும் அந்த கடமைகளும் உரிமைகளும் இருக்கின்றன,” என்கிறார் லோகேஸ்ராஜா.