கஃப் ரோட்டில் மூன்றாண்டுகளாக ‘ஆம்பூர் பிரியாணி’ உணவகத்தை நடத்தி வரும் திரு முத்துசாமி, இரு வாரங்களுக்கு முந்திய ஞாயிறன்று எதிர்கொண்ட வியாபார வீழ்ச்சியை இதுவரை அவர் சந்தித்திருக்கவில்லை.
கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறாமல் இருப்பது கூட்டம் குறைந்திருப்பதற்கு ஒரு காரணம் எனக் கருதும் திரு முத்துசாமி, கிட்டத்தட்ட 80% வியாபாரச் சரிவை எதிர்நோக்குகிறார். செலவைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறார்.
வாடகை, ஊழியர் கிடைப்பது, ஊழியர் சம்பளம், போட்டித்தன்மை போன்ற பல சவால்களை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
கடைவீடுகளுக்கும் வாடகை சலுகை
லிட்டில் இந்தியாவில் கடை வாடகை அதிகமாக இருந்தபோதும், வியாபாரம் செழிப்பாக இருந்து வந்ததால் வர்த்தகர்களால் சமாளிக்க முடிந்து வந்தது. ஆனால், தற்போதைய மந்தநிலை அவர்களை விழிபிதுங்க வைத்துள்ளது.
பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் ஒன்றாக, அரசாங்க அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் இடங்களுக்கு வாடகை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேக்கா நிலைய கடைகளுக்கு இது ஓர் உதவியாக உள்ளது.
முதல் தளத்தில் ஈரச்சந்தை, உணவங்காடி கடைகளுக்கு ஒரு மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார் தேக்கா நிலையத்தில் கடந்த 45 ஆண்டுகளாக கடை நடத்திவரும் 61 வயது திரு முஸ்தஃபா ஷாஹுல் ஹமீது.
வாடகை சலுகை ஓரளவு கைகொடுக்கும் என்றாலும் அவருக்கு அதைவிட மனிதவள செலவே அதிகமாக உள்ளது.
“வெளிநாட்டு ஊழியர் தீர்வையை அரசாங்கம் குறைத்தால் வர்த்தகர்களுக்குப் பேருதவியாக இருக்கும்,” என்றார் தேக்கா நிலைய வர்த்தகர் சங்கத்தின் துணைத் தலைவரான அவர். இரண்டாம் தளத்தில் உள்ள கடைகள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு அரை மாத வாடகைத் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் 13 ஆண்டுகளாக அங்கு தொழில் புரிந்துவரும் திரு மட்டல் சௌத்ரி.
மூன்று கடைகளை நடத்திவரும் அவர் வாடகைக் குறைக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொண்டாலும் பொருட்களை எப்படி விற்பது என்ற கவலையில் மூழ்கியிருக்கிறார்.
லிட்டில் இந்தியா ஆர்கேட் கடைத்தொகுதியிலுள்ள கடைக்காரர்களுக்கு பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களுக்கு அரை மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கடைவீடுகளில் தொழில் நடத்தும் பலரும் வாடகைக்குத்தான் அக்கடைகளை எடுத்து இயங்கி வருகின்றனர்.
தனிநபர்களின் உரிமையாக இருக்கும் கடைவீடுகளின் வாடகை குறைக்கப்படுவதாகத் தெரிய வில்லை என்று சிலர் கவலை தெரிவித்தனர்.
சொத்து உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 15% சொத்து வரிச் சலுகையைக் கொண்டு சொத்து உரிமையாளர்கள் வாடகைதாரர்களுக்கு வாடகையில் சலுகை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.
ஆனால், 15% சொத்து வரிச் சலுகை என்பது வாடகையைக் குறைக்கும் அளவிற்குக் குறிப்பிடத்தக்கதல்ல என்றார் லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா.
“உதாரணத்திற்கு மாதம் $10,000 வாடகை உள்ள கடைக்கு உரிமையாளர் ஆண்டுக்கு ஏறக்குறைய $12,000 சொத்து வரி கட்டவேண்டும். இதில் 15% என்பது $1,800தான். வாடகைதாரர்களுக்கும் அது பெரிய அளவில் சேமிப்பாக இருக்காது,” என்றார் அவர்.
இன்னும் அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டால் வாடகைச் சலுகை வழங்க முடியும் என்ற அவர், கடந்த சில வாரங்களாக உதவிகோரி தினமும் லிஷா அலுவலகத்திற்கு ஏராளமான வர்த்தகர்கள் வருவதாகவும் கட்டடங்கள் தனிநபர்களின் உரிமையாக இருப்பதால் தாங்கள் எதுவும் செய்யமுடியவில்லை என்றும் கூறினார்.
“வங்கிக்கு மாதந்தோறும் சொத்துக் கடனை உரிமையாளர்கள் அடைக்கவேண்டியுள்ளது. வங்கிகள் மாதக் கடனை ஒத்திவைத்தாலோ வட்டியைத் தள்ளிவைத்தாலோ அல்லது அரசாங்கம் முற்றிலும் சொத்து வரியை ஓராண்டுக்குத் தள்ளுபடி செய்தாலோ உரிமையாளர்களால் வாடகையைக் குறைக்க இயலும்,” என்றார் லிட்டில் இந்தியாவில் பல கடைகளுக்கு உரிமையாளராகவும் இருக்கும் திரு ராஜ்குமார்.
இந்தியப் பயணத் தடை ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை ‘ஓசிஐ’ உட்பட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விசாக்களையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது லிட்டில் இந்தியாவின் பயணத்துறை சார்ந்த வர்த்தகங்களையும் சரக்கு வரத்தையும் பாதித்துள்ளது.
தினசரி விமானம் மூலம் இந்தியாவிலிருந்து பூவும் பல இந்தியப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது விமானச் சேவைகள் குறைக்கப்படுவதால் அந்த வர்த்தகங்களில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதுகின்றனர் வியாபாரிகள்.
பாதிக்கப்படும் காய்கறி, பூ வியாபாரம்
“மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து மல்லிகைப் பூ இறக்குமதி செய்யப்பட்டாலும் அவை உதிரிப் பூக்களாகவே வருகின்றன. கட்டிய மல்லிகை, பிச்சிப் பூ பந்துகள் இந்தியாவிலிருந்தே வருகின்றன,” என்று சொன்னார் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையின் உரிமையாளர் திரு ராஜ்குமார்.
“அத்துடன், சீனாவிலிருந்து உலகமெங்கும் பொருட்கள் ஏற்றுமதி ஆகும் பட்சத்தில் கப்பல் போக்குவரத்து செலவு மிகக் குறைவாக இருக்கும். பொருட்களை எளிதில் இறக்குமதி செய்யலாம். ஆனால் தற்போது அனைத்து பயணங்களும் ஸ்தம்பித்த நிலையில் விமானப் பயணத்தை நம்பி பொருட்கள் இறக்குமதி ஆகின்றன. அதனால் செலவு பல மடங்காகிறது,” என்று அவர் மேலும் விளக்கினார்.
பயணி விமானப் போக்குவரத்து குறைவதால், காய்கறிகளின் விலைகளும் அதிகரிக்கலாம் என்றார் ‘ஆல் இந்தியா சூப்பர்மார்ட்’ கடையை நடத்திவரும் ‘ஸ்ரீ முருகன் டிரேடிங்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு கே.எம்.ராமலிங்கம்.
“இந்தியாவிலிருந்து அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் அதன் ஆயுட்காலம் கருதி, பெரும்பாலும் பயணிகள் வரும் விமானங்கள் மூலம் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. விமானங்கள் குறைவதால், இங்கு வரும் காய்கறிகளின் எண்ணிக்கை குறைந்து, விலைகள் கூடுவதற்கு வாய்ப்புண்டு,” என்றார் அவர்.
“கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான பெட்டிகள் பெரும்பாலும் சீனாவிலிருந்து வரும். தற்போது சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் எந்தப் பொருளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறது.
“அண்மையில் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடையை நீக்கியிருந்தாலும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கப்பல் மூலம் பொருட்கள் வந்து சேர அதிக காலம் எடுக்கலாம். எப்போது வரும், எந்த அளவிற்கு வரும் என்று சொல்ல முடியாது,” என்றார் திரு ராமலிங்கம்.
மும்மடங்கு அதிகரித்துள்ள வெங்காய விலை
சிங்கப்பூருக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதியாகிறது. கொவிட்-19 கிருமித்தொற்று பரவத் தொடங்கியது முதல் சீனாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதில்லை. பற்றாக்குறையால் பாகிஸ்தானும் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டது என்றார் ‘சென்னை டிரேடிங் அண்ட் சூப்பர்மார்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் திரு வை. ராமமூர்த்தி.
“$3 விற்ற மூன்று கிலோ வெங்காய பையை தற்போது $8.50க்கு விற்கிறோம். சில கடைகள் $10க்கும் மேல் விற்கின்றன. வெங்காயம் இந்திய சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இந்த விலை உயர்வு ஒரு சவாலாக உள்ளது,” என்றார் அவர்.
லாப நோக்கத்தைவிட இந்தியர்களின் தேவைகளைக் கருதி முடிந்த அளவிற்கு வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பதாக பல கடைகள் தமிழ் முரசிடம் கூறின.
சிங்கப்பூருக்கு கப்பல் மூலம் வரும் வெங்காயத்தின் விலை வரும் 25ஆம் தேதியிலிருந்து குறையும் என எதிர்பார்க்கிறார் திரு ராமமூர்த்தி.
லிட்டில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை குறைவு, காய்கறிகளின் விலை ஏற்றம், உணவகங்கள், விடுதிகளில் குறைந்த வியாபாரம் போன்ற காரணங்களால் பொதுவாகவே வியாபாரம் கிட்டத்தட்ட 20 விழுக்காடு குறைந்துள்ளது என்று பல வர்த்தகர்கள் தமிழ் முரசிடம் கவலை தெரிவித்தனர்.
பயணத்தடையால் பாதிப்புறும் பயணச் சேவை
லிட்டில் இந்தியாவின் பஃப்ளோ சாலையில் பேரடைஸ் டூர்ஸ் எனும் பயண முகவர் அலுவலகத்தை நடத்திவரும் திரு சு சிராஜுதீன், பலரும் தங்களது இந்தியப் பயணங்களை மாற்றுகின்றனர் அல்லது ரத்து செய்கின்றனர் என்று கூறினார்.
ஷிர்டி பாபா கோவிலுக்குச் செல்லவிருந்த 26 பேர் கொண்ட குழு பயணத் திட்டத்தையே மாற்றவேண்டியுள்ளது. நேற்று முன்தினம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மும்பை செல்லவிருந்த அவர்கள் தங்களது பயணத்தை ஜூன் பள்ளி விடுமுறைக்கு மாற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பல விமான நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்து வரும் பட்சத்தில் மேலும் சேவைகள் குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல விமான நிறுவனங்கள் நீக்குப்போக்குடன் செயல்படுகின்றன. பயணத் தேதியை கூடுதல் கட்டணமின்றி மாற்றும் வசதி, பயணத்தை ரத்து செய்வோருக்கு முழுத் தொகையை மீண்டும் பெறும் வசதி போன்றவற்றை சில நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் எல்லா விமானச் சேவைகளும் இவ்வசதியை தர வேண்டும் என்று திருமதி மீரா கூறினார்.
பள்ளி விடுமுறையை ஒட்டி இவ்வாரம் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்த அவர் தமது பயணத்தை ஜூன் மாதத்திற்கு மாற்றியுள்ளார். தேதியை மாற்றும் வசதியுடன் கூடுதல் தொகை செலுத்தி பயணச்சீட்டை வாங்கி இருந்ததால் தமக்கு பிரச்சினை இல்லை என்றும் ஆனால் தமது சகோதரர் தேதியை மாற்ற கூடுதல் கட்டணம் செலுத்தினார் என்றும் அவர் கூறினார்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்தியா செல்ல விழைவோர் சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் தேவையான ஆதரவு ஆவணங்களுடன் விசாவிற்கு பதிவு செய்யலாம். மேல் விவரங்களுக்கு மின்னஞ்சல்: