சென்னை: கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தி அவற்றை ஒழிக்கும் முயற்சியாக தமிழகத்தில் இப்போது 21 நாள் ஊரடங்குக் கட்டுப்பாடு நடப்பில் இருக்கிறது.
அந்தக் கட்டுப்பாடு காரணமாக மாநிலத்தில் சுமார் 100,000 பேர் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தேவையான அளவுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உடனடியாக அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் தொண்டூழிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டு இருப்போரில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மனநோயாளிகள், வீடற்ற மக்கள், உழைத்து பிழைக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் போன்ற பலரும் அடங்குவர் என்று தொண்டூழிய அமைப்புகள் தெரிவித்து இருக்கின்றன.
சென்னையில் இப்படிப்பட்ட 15,000 பேர் உணவின்றி தவிப்பதாகவும் மாநிலம் முழுவதும் மொத்தம் 100,000க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு இலக்காகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர்களில் பலர் உடலில் போதிய தெம்பு இன்றி சாலை ஓரங்களிலும் இதர பகுதிகளிலும் படுத்த படுக்கையாகக் கிடப்பதால் அவர்களுக்கு உதவ நினைத்தும் தடை உத்தரவு காரணமாக தொண்டூழிய நிறுவனங்களால் உதவ முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மனிதர்கள் ஒருபுறம் இருக்க, தெருக்களில் திரிகின்ற நாய், பூனை, கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளும் உணவின்றி தவிப்பதாகவும் சில இடங்களில் விலங்குகள் மடிந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தடை உத்தரவு இருந்தாலும் வீடற்ற முதியோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது என்றாலும் இன்னமும் அவர்களில் பலரும் சாலைகளிலேயே பொழுதைக் கழிப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு நேரடியாக உணவு வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் தொண்டூழிய நிறுவனங்கள் தவிப்பதாகவும் ஆகையால் அரசாங்கம் உடனடியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அத்தகைய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலவரம் பற்றி கருத்து கூறிய சில தொண்டூழிய அமைப்புகள், இத்தகைய ஆதரவற்ற மக்களில் பலர் இரண்டு நாட்களாகப் பட்டினி கிடக்கிறார்கள் என்று கூறுகின்றன. ஆகையால் அவர்களுக்கு உடனடி உதவி தேவை என்று அந்த அமைப்புகள் அவசர குரல் கொடுத்து வருகின்றன.