சிங்கப்பூர் காற்பந்துக் குழு, ஜோகூர் டாருல் தஸிம் (ஜேடிடி) காற்பந்துக் குழு ஆகியவற்றுக்கு தலைவர் பொறுப்பு வகிக்கும் ஹாரிஸ் ஹருண் (படம்), சக வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்பவர்.
தற்போது, கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் தமக்குரிய பங்கை ஆற்ற அவர் முன்வந்துள்ளார்.
இந்தச் சோதனை காலத்தில் சமுதாயத்திற்கு உதவ ஜேடிடி குழு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், இதர ஊழியர்கள் ஆகியோரது சம்பளம் 33 விழுக்காடு குறைக்கப்படுவதாக ஜேடிடி குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அதுபோக, வீரர்கள் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதி, ஜோகூர் பேரிடர் நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்திலக்க சம்பளம் பெறும் மத்திய திடல் ஆட்டக்காரரான 29 வயது ஹாரிஸ், உலகளவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா கிருமி, மனிதகுலத்திற்குப் பெரும் சவாலைத் தந்துள்ளதாகக் கூறினார். இந்த இருண்ட காலகட்டத்தை மக்கள் அனைவரும் கடந்து வர மேலும் அதிகமானோர் உதவ முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஜோகூர் பேரிடர் நிதிக்கு நன்கொடை வழங்குவது குறித்து கருத்துரைத்த ஹாரிஸ், “இது மிகச் சிறந்த முயற்சி. சிரமமான காலகட்டத்தில் மக்களின் நலன் குறித்து எங்களது குழு கவலை கொண்டுள்ளது,” என்றார்.