மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த செவ்வாய்க்கிழமை, மாஸ்கோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டெனிஸ் புரோட்சென்கோ உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு மருத்துவ ஊழியர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினர்.
டெனிசிடம் பேசும்போது புட்டின் எந்தவித முகக்கவசமும் அணியாமல், கைகளைக் குலுக்கியபடி சாதாரணமாக நடந்துகொண்டார். இந்நிலையில், புட்டினுடன் பேசிய மருத்துவர் டெனிஸ் புரோட்சென்கோவுக்கு தொற்று உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள டெனிசின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், புட்டினுக்குத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் கிரம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் இதுவரை 2,337 பேருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.