லண்டன்: பிரிட்டனில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் “யூனிவர்சல் கிரடிட்” என்றழைக்கப்படும் நல்வாழ்வு வழங்கீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.
இதனால் பிரிட்டன் பெரிய அளவில் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.
கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டில் முடக்கநிலையை அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஏராளமானோர் நல்வாழ்வு நிதிக்கு விண்ணப்பித்தனர்.
மார்ச் மாதம் 16ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 950,000 பேர் இந்த வழங்கீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்து வழங்கீடுகளைப் பெற்றனர்.
இந்த நல்வாழ்வு வழங்கீட்டு நிதி என்பது வேலையில்லாதோர் அல்லது குறைந்த வருமானம் ஈட்டுவோர் ஆகியோருக்கு அரசாங்கம் வழங்கும் நிதியாகும்.
அதேபோல் இப்போது ஏற்பட்டுள்ள முடக்கநிலையால் பொருள் ஈட்ட வழியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
வர்த்தகங்களுக்கும் பொது நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நல்வாழ்வு நிதிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா கிருமித் தொற்றைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதுபோன்ற அவசர நிலையில் பிரதமர் போரிஸ் கையாண்ட விதம் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
முன்னதாக அரசாங்கமும் பேங்க் ஆப் இங்கிலாந்தும் இணைந்து பொருளியலை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் துரிதமாக இறங்கியுள்ளதாக மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
ஆனால் இப்போது பிரிட்டன் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் பிரிட்டிஷ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால்தான் நல்வாழ்வு நிதிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா கிருமித் தொற்று நெருக்கடியால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அரசாங்க ஆதரவுடன் கடன் அளிப்பதாக உறுதியளித்திருந்த வங்கிகள் அந்தக் கடன்களை நிறுவனங்களுக்குக் கொடுப்பதாகத் தெரியவில்லை.
அவ்வாறு இந்த அவசர காலத்தில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் நிதியை மீண்டும் பெறமுடியாத நிலை ஏற்படக்கூடும் என்பதால் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன்கொடுப்பதில் இருந்து பின்வாங்குவதாகத் தெரிகிறது.