சென்னை: புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள் ஒன்றரை லட்சம் முகக் கவசங்களைத் தயாரித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக கைதிகள் இந்தப் பணியில் ஈடுபட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா கிருமித் தொற்றைத் தவிர்க்க முகக் கவசங்கள் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பரிந்துரைத்த முகக் கவசங்கள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. இதனால் அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதையடுத்து புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளை முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்த சிறைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த மார்ச் 21ஆம் தேதியில் இருந்து புழல் சிறைக் கதைகள் முகக்கவச தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 தினங்களில் மட்டும் அவர்கள் ஒன்றரை லட்சம் முகக் கவசங்களைத் தயாரித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் 35 ஆயிரம் முகக் கவசங்கள் தயாராகின.
இவற்றுள் 75 விழுக்காடு முகக்கவசங்கள் காவல்துறைக்கு வழங்கப்படுவதாகவும் மீதமுள்ளவை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னை ஆயுதப்படை பெண் போலிசாரும் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலிசாருக்குப் போதுமான அளவில் முகக்கவசங்கள் கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து தையல் தொழில் தெரிந்த 30 பெண் போலிசார் தங்கள் வீட்டில் உள்ள தையல் இயந்திரங்களைக் கொண்டுவந்து ஒரே இடத்தில் வைத்து முகக்கவசம் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 60 ஆயிரம் முகக் கவசங்களைத் தயாரித்து காவல்துறைக்கு வழங்குவதே தங்கள் இலக்கு என அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பணியில் 10 ஆண் போலிசாரும் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தினந்தோறும் 2 ஆயிரம் முகக்கவசங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.