சென்னை: ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு விதமான குடும்ப வன்முறைக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதாகவும் பல பெண்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையத்தின் தலைவி கண்ணகி பாக்கியநாதன் கூறியுள்ளார்.
தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வீடுகளில் குடும்ப வன்முறையால் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குடும்பங்களில் நிகழும் பெண்கள் மீதான வன்முறை கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
“குடும்ப வன்முறை என்பது ஒரு குற்றமாகும். எனவே வீடுகளில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது.
“அப்படி ஏதாவது வன்முறை நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
“குடும்ப வன்முறையை தடுப்பதில் ஊடகங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்,” என கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீது வன்முறையை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் மனநலம், ஆற்றுப்படுத்துதல் தொடர்பான நிகழ்வுகளையும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பங்கேற்கக்கூடிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும்படி ஆணையத்தின் சார்பாக வேண்டுவதாக கண்ணகி பாக்கியநாதன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.