பாதுகாப்பு இடைவெளியைக் கட்டிக்காப்பது தொடர்பான விதிமுறைகளை மீறியதன்பேரில் சிராங்கூன் ரோட்டிலுள்ள ' யூனிவர்செல் மெபைல் மார்க்கெட்' என்ற கடையின் உடனடி மூடலுக்குச் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தொற்றுநோய்ச் சட்டத்தின் 19ஆம் பிரிவை மீறிய அந்தக் கடை, 14 நாட்களுக்கு உடனடியாக மூடவேண்டும் என்று அமைச்சு, இன்று வெளியிட்ட தன் செய்தி அறிக்கையில் தெரிவித்தது. அத்துடன், கடை வளாகம் நன்கு சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5ஆம் தேதி பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு, சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிவதைக் கண்டனர். கடை நிர்வாகிகள், கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு இடையே குறைந்த இடைவெளியை உறுதிசெய்யவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனப் புலப்பட்டது. சோதனை நடத்திய அதிகாரிகள் ஒருமுறை எச்சரித்தபோதும் கடையினர் அதனைப் பொருட்படுத்தவில்லை என அதே நாளில் மீண்டும் திரும்பிய அதிகாரிகள் தெரிந்துகொண்டனர்.
இந்தக் கடையை மூடச் சொல்லி சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்கிய யூனிவர்செல், மே மாதம் 4ஆம் தேதி வரை மூடியிருக்கும்.