'தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்' என்று வரவேற்கிறது 'தமிழன்டா' கைபேசி செயலியின் முகப்புப் பக்கம். தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு திறன்பேசிச் சமூக வலைத் தளம்தான் 'தமிழன்டா'. தமிழர்களின் தேவையறிந்து அதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், 'டென்ட்' கொட்டாய், படிப்பும் வேலையும், உறவுகள், ஆன்மீகம், ஆட்டம் (விளையாட்டு), அரசியல் பேட்டை, ஆஹா ஆர்கானிக், நம்ம சென்னைடா, நெல்லை வாலா, மதுரை மச்சான்ஸ் என்று சுமார் 25 பிரிவுகள் இந்த வலைத்தளத் தில் இருக்கின்றன. நமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும். 'லைக்'கிற்குப் பதில் 'விசில்' என்பது போன்ற மண்ணுக்கேற்ற வார்த்தைகள் இத் தளத்தில் புழக்கத்தில் இருக்கின்றன.
இதை வடிவமைத்த சாம் இளங்கோ மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியத் துணைத் தலைவராக இருந்தவர். கடந்த ஆண்டு சிவகாசிக்குச் சென்றபோது பரவலாக அனைவரிடமும் விலை மிகுந்த திறன்பேசிகள் இருப்பதைக் கவனித்தார் இளங்கோ. ஆனால், அதனைச் சாதாரண கைபேசியைப் போலவே பேசுவதற்கும் பாடல் கேட்பதற்கும் காணொளி பார்ப்பதற்கும், 'வாட்ஸ்அப்' தகவல் பரிமாற்றத்துக்கும் மட்டுமே அவர்கள் பயன்படுத்துவதை அவர் கண்டார். 2016-08-09 06:00:00 +0800